×

மக்கள் நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர் தமிழ்நாட்டு கோரிக்கைகளை எடுத்துவைத்து நாடாளுமன்றத்தில் வாதாட வேண்டும்: திமுக எம்.பி.க்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

சென்னை: லட்சக்கணக்கான மக்கள் உங்கள் மீதும், என் மீதும், கழகம் மீதும் நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர். மதிப்பிட முடியாத பொறுப்பு உங்கள் கரங்களுக்கு வந்திருக்கிறது. இதனை காப்பாற்றும் வகையில் மக்களைக் காக்கும் பணியை நீங்கள் அனைவரும் செய்து பெருமை சேர்க்க வேண்டும் என்று திமுக தலைவர், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்துக்குத் தலைமையேற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நாடாளுமன்றத்தில் அதிக அனுபவம் கொண்ட டி.ஆ.பாலு முதல், முதல் முறை எம்.பி.யாகும் பலரும் இங்கு இருக்கிறீர்கள். மிகமிகக் குறைந்த வயதில் அருண் நேரு பெரம்பலூர் எம்.பி. ஆகி உள்ளார். இப்படி அனைவரும் இருக்கிறீர்கள். வெற்றி பெறுபவரே வேட்பாளர் என்ற அடிப்படையில்தான் உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. உங்களுக்கு இத்தகைய பெரிய வாய்ப்பை அளித்த கழகத்துக்கும், உங்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கும் மிகமிக உண்மையாக இருங்கள். இது தான் தலைவர் என்கிற முறையில் நான் வைக்கும் வேண்டுகோள் ஆகும்.

மிகப்பெரிய பெரும்பான்மையை மட்டுமல்ல ஆட்சி அமைக்கத் தேவையான அளவுக்கு செல்வாக்கைக் கூட பாஜ அடைய வில்லை. 370 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று சொல்லி 240க்கு இறங்கி விட்டது பாஜ. இந்தச் சூழலில் நாம் தமிழ்நாட்டுக்கான கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் எடுத்து வைத்து வாதாட வேண்டும், போராட வேண்டும். ஏராளமான வாக்குறுதிகளை நாம் மக்கள் மன்றத்தில் வைத்தோம். அவை அனைத்தையும் நாடாளுமன்றத்தில் எடுத்து வைத்து அதனை செயல்பட வைக்க வேண்டும். பாஜவுக்கு சரிக்குச் சமமாக இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இருக்கப் போகிறோம்.

இந்த வாய்ப்பை ஆக்கபூர்வமான விவாதங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள்தான் இருக்கிறது. எனவே நாடாளுமன்ற உறுப்பினர்களது செயல்பாடுகளை மக்கள் உன்னிப்பாக கவனிப்பார்கள். அந்த எச்சரிக்கை உணர்வோடு செயல்பட வேண்டும். லட்சக்கணக்கான மக்கள் உங்கள் மீதும், என் மீதும், கழகம் மீதும் நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளார்கள். இதனைக் காப்பாற்றும் வகையில் மக்களைக் காக்கும் பணியை நீங்கள் அனைவரும் செய்து கழகத்துக்கும் எனக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

The post மக்கள் நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர் தமிழ்நாட்டு கோரிக்கைகளை எடுத்துவைத்து நாடாளுமன்றத்தில் வாதாட வேண்டும்: திமுக எம்.பி.க்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Tamilnadu ,Parliament ,Chief Minister ,M.K.Stal ,DMK ,Chennai ,
× RELATED வெளிமாநில பதிவெண் கொண்டு...