கோவை, ஜூன் 8: தென்னிந்திய மில்கள் சங்க (சைமா) தலைவர் சுந்தரராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜவுளித்துறை தொடர்புடைய, அனைத்து செயற்கை பஞ்சு மூலப்பொருட்கள் இழைகள் மற்றும் நூலிழைகள் மீது குவிப்பு வரிகளை நீக்கி, உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கும், வெற்றி உத்தியை பெற செயற்கை பஞ்சு மீதான இறக்குமதி வரியை 5 சதவீதமாக குறைப்பது என்ற ஒன்றிய அரசின் கொள்கை முடிவுகளை சைமா வரவேற்கிறது.
இருப்பினும், மூலப்பொருட்களின் மீது விதிக்கப்பட்ட தரக்கட்டுப்பாட்டு உத்தரவு, தொழில்துறையின் செயல்திறனை சிதைத்துள்ளது. பருத்திக்கு இணையாக 5 சதவீத ஜி.எஸ்.டி விகிதத்தின் கீழ் முழு செயற்கை பஞ்சு மதிப்பு சங்கிலியையும் கொண்டுவர வேண்டும். மேலும், மூலப்பொருட்களின் சீரான விநியோகத்தை உறுதிசெய்து, வரி திரும்ப பெறுதலில் உள்ள பிரச்சினை உள்பட செயற்கை பஞ்சு தொடர்பான அனைத்து கட்டமைப்பு சிக்கல்களையும் தீர்க்க ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
செயற்கை இழை ஜவுளி மதிப்பு சங்கிலியை 5 சதவீத ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வருவதால் அரசின் வருவாய் பாதிக்காது. அதே நேரத்தில், நாட்டில் உள்ள ஏழை மக்கள், மலிவு விலையில் ஜவுளி வாங்க முடியும். மேலும், பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை நீக்கினால், பருத்தி மற்றும் பருத்தி கலந்த ஜவுளிப்பொருட்கள் உற்பத்தியாளர்கள் ஏற்றுமதியில் தங்கள் பங்கை இன்னும் அதிகரிக்க முடியும். இதற்கான முயற்சிகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
The post பஞ்சு மீதான இறக்குமதி வரி 5 சதவீதமாக குறைப்பு appeared first on Dinakaran.