×

நாடு மதித்து போற்றும் தலைவர்களை அவமதிக்கும் செயலை மோடி அரசு உடனடியாக கைவிட வேண்டும் : முத்தரசன் கோரிக்கை

சென்னை: நாடாளுமன்றத்தில் காந்தி, அம்பேத்கர், சிவாஜி சிலைகள் இடமாற்றம் செய்ததற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த பத்தாண்டுகளாக மாற்றுக் கருத்துகளுக்கும் விமர்சனம் செய்யும் கருத்துரிமையினையும் சகித்துக் கொள்ள முடியாத, பாசிச வகைப்பட்ட தாக்குதலை மோடி அரசு நடத்தி வந்தது. இதன் காரணமாக சிலர் கொல்லப்பட்டனர். பலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இந்த வெறுப்பு அரசியல் தொடரக் கூடாது என்று, மக்கள் வாக்களித்ததன் மூலம் தெளிவாக எச்சரித்துள்ளனர்.

ஆனால், விக்கிரமாதித்தன் கதை வேதாளம் மீண்டும், மீண்டும் மரம் தேடி செல்வது போல், மோடி பிரதமர் பொறுப்பை ஏற்கும் முன்னதாகவே அன்னிய ஆதிக்கத்தை எதிர்த்தும், அரசியல் உரிமைக்காகவும் போராடி மறைந்த தலைவர்களை அவமதிக்கும் நடவடிக்கை தொடங்கி விட்டது.

நாடாளுமன்ற பராமரிப்பு என்கிற பெயரால், தேச விடுதலைப் போராட்டத்தில் தலைமை வகித்த தேசப்பிதா காந்தி, அரசியல் அமைப்பு சட்டத்தை வரைவு செய்து வழங்கிய சமூக நீதி போராளி அண்ணல் அம்பேத்கர், சமய சார்பற்ற பண்பின் பிரதிநிதியாக திகழ்ந்த சத்திரபதி சிவாஜி ஆகியோரது சிலைகள் அகற்றப்பட்டு, இடம் மாற்றம் செய்து வருகின்றனர். நான்கு தலைமுறை தாண்டியும் தேசப்பிதா காந்தியை உலக நாடுகள் போற்றியும், வணங்கியும் வருகின்றன. இந்த நிலையில் திரைப்படம் மூலம் தான் காந்தி உலக நாடுகளுக்கு அறிமுகமானார் எனக் கூறி இழிவுபடுத்தி, மோடி கண்டனத்துக்கு ஆளானார்

“கடவுளின்” அவதாரமாக தன்னை கூறிக் கொள்ளும் மோடி, அண்ணல் காந்தியை தான், தான் நாட்டுக்கு அறிமுகப் படுத்தினேன் என்று கூறினாலும் கூறுவார். அகங்காரமும், ஆணவமும் தலைக்கேறி தடி நாக்கில் பேசி வந்த மோடியின் ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்டி, மக்கள் அளித்த தீர்ப்பின் உணர்வை மோடி மதிக்க வேண்டும். நாடு மதித்து போற்றும் தலைவர்களை அவமதிக்கும் செயலை மோடி அரசு உடனடியாக கைவிட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது அவரை ஆதரித்து நிற்போர் அவருக்கு தக்க அறிவுரை வழங்க வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.

The post நாடு மதித்து போற்றும் தலைவர்களை அவமதிக்கும் செயலை மோடி அரசு உடனடியாக கைவிட வேண்டும் : முத்தரசன் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Modi government ,Mutharasan ,Chennai ,Secretary of State ,Gandhi ,Ambedkar ,Sivaji ,Ira ,Muttarasan ,Dinakaran ,
× RELATED சாதிவெறி செயல்களை இரும்புக்கரம்...