வேலூர், ஜூன் 5: வேலூர் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளரிடம் அதிமுக வேட்பாளர் டெபாசிட் இழந்தார். இதனால் கட்சியினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டி.எம்.கதிர்ஆனந்த் மொத்தம் 5 லட்சத்து 68 ஆயிரத்து 692 வாக்குகள் பெற்றார். பாஜ கூட்டணியின் புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 3 லட்சத்து 52 ஆயிரத்து 990 வாக்குகளை பெற்றுள்ளார். இவரை விட 2 லட்சத்து 15 ஆயிரத்து 702 வாக்குகள் அதிகம் பெற்று கதிர்ஆனந்த் அபார வெற்றிபெற்றார். பாஜ கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் டெபாசிட் பெற்றுள்ளார்.
அதிமுக வேட்பாளர் பசுபதி 1 லட்சத்து 17 ஆயிரத்து 682 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்துள்ளார். இவர் உட்பட 29 வேட்பாளர்களும் அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர். 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக பெரும்பாலான பூத்களில் சொற்ப வாக்குகள் மட்டுமே பெற்றனர். ஒற்றை, இரட்டை இலக்கு எண்ணிக்கையில் வாக்கு பதிவானது. ஒவ்வொரு சுற்று முடிவுகளிலும் 10 ஆயிரம் வாக்குகள் கூட தாண்டவில்லை. வேலூர் தொகுதியில் அதிமுக டெபாசிட் இழந்துள்ளதால் அதிமுகவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிமுக அடுத்தடுத்து பெரிய தோல்விகளை சந்தித்து வருவதால் தொண்டர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
The post டெபாசிட் இழந்த அதிமுக வேட்பாளர் கட்சியினர் கடும் அதிர்ச்சி வேலூர் மக்களவை தொகுதியில் appeared first on Dinakaran.