×

இணைய வழியில் 550 பேர் விண்ணப்பம் செல்லப்பிராணிகளை வளர்க்க 168 பேருக்கு மட்டுமே உரிமம்: தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கு இணையவழி மூலமாக பதிவு செய்யப்பட்ட 550 விண்ணப்பங்களில், 168 பேருக்கு மட்டுமே உரிமம் வழங்கப்பட்டுள்ளது. முறையாக விண்ணப்பிக்காததால் மீதமுள்ள விண்ணப்பங்கள் கிடப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாம்பரம் மாநகராட்சி பொதுசுகாதாரத்துறையின் கீழ், 3 நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

மேலும், அனகாபுத்தூர், பாரதிபுரம் மற்றும் குண்டுமேடு ஆகிய இனக்கட்டுப்பாட்டு மையங்களில் தெருநாய்களுக்கு இனக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதோடு, வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிடிக்கப்படும் தெருநாய்களுக்கு இனக்கட்டுப்பாட்டு மையத்தில் கால்நடை மருத்துவ குழுவினரால் இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சை முடிந்து 5 நாட்கள் வரை பராமரிக்கப்பட்டு, உடல் தகுதி பெற்ற பின் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசியும் போடப்பட்டு பிறகு, பிடித்த இடத்திலேயே விடப்படுகிறது.

வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய் மற்றும் பூனை ஆகியவை பொது இடங்களுக்கு உரிமையாளர்களால் அழைத்து செல்லப்படுகிறது. இதற்கு, வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி கட்டாயமாக போடப்பட்டிருக்க வேண்டும். செல்லப்பிராணிகள் மற்றும் தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி போடப்படுவதன் மூலம் பொதுமக்களின் நலனை பாதுகாக்க உறுதி செய்யப்படுகிறது.
இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு அவற்றின் உரிமையாளர்கள் அதற்கான உரிமத்தை அவசியம் பெற்றிட வேண்டும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

செல்லப் பிராணிகளுக்கான உரிமம் பெறுவதற்காக, தாம்பரம் மாநகராட்சியின் https://tcmcpublichealth.in என்ற இணையதளம் வாயிலாக உரிமையாளர்கள் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டு, விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை, செல்லப்பிராணிகள் வளர்க்க உரிமம் பெறுவதற்கு இணையதளம் வாயிலாக 550 பேர் விண்ணப்பித்த நிலையில், ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, 168 பேருக்கு மட்டுமே செல்லப்பிராணிகள் வளர்க்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்கள் முறையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யாததால், அவர்களது விண்ணப்பம் கிடப்பில் வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவது தொடர்பான சந்தேகங்களுக்கு மாநகராட்சியின் கால்நடை மருத்துவர் – 8825791424 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். செல்லப் பிராணிகளின் உரிமையாளர்கள் 20.6.2024ம் தேதிக்குள்ளாக இணையதளம் வாயிலாக முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்து தங்கள் செல்லப் பிராணிகளின் விவரங்களை பதிவேற்றம் செய்து, செல்லப் பிராணிகளுக்கான உரிமத்தினை பெற்று பயனடையுமாறு தாம்பரம் மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

The post இணைய வழியில் 550 பேர் விண்ணப்பம் செல்லப்பிராணிகளை வளர்க்க 168 பேருக்கு மட்டுமே உரிமம்: தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tambaram Corporation ,Tambaram ,Public Health Department of Tambaram Corporation ,Dinakaran ,
× RELATED செல்லப் பிராணிகளுக்கான உரிமம் பெற 20ம்...