கடையம்: கடையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில், அகத்தியர், தேரையர் போன்ற சித்தர்கள் வழிபாடு செய்த தோரணமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகளுடைய இவ்வாலயத்தில், ஆன்மீக பணியோடு, கிராமப்புற ஏழை எளிய மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் கல்விப்பணியும் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நேற்று விரைவில் பள்ளி திறக்கக் கூடிய நிலையில், வரும் கல்வியாண்டில் மாணவ, மாணவிகள் கல்வியில் மேன்மை பெற வேண்டி கோயில் மலையடிவாரத்தில் முருகப் பெருமானுக்கு 11 வகையான வாசனைப் பொருட்களால் அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. இதில் பள்ளி மாணவ மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் முருகர் வேடமிட்டு முருகப் பெருமானுக்கு மலர் தூவி வழிபாடுகளை நடத்தி கல்வியில் மேன்மை பெற வேண்டிக் கொண்டனர்.
பின்னர் அங்குள்ள அரங்கில் மாணவ, மாணவிகள் நாடு வளம் பெற வேண்டி உறுதிமொழி எடுத்துக் கொண்டதுடன், வில்லுப்பாட்டு, காவடி பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பாரம்பரிய கிராமப்புற விளையாட்டு உபகரணங்கள் குறித்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்ததுடன் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் தலைமையிலான கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
The post தோரணமலை கோயிலில் கல்வியில் மேன்மை பெற முருகர் வேடமிட்டு வழிபாடு செய்த மாணவ மாணவிகள் appeared first on Dinakaran.