×

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் இன்ஸ்பெக்டர் மீது சிபிசிஐடியில் மேலும் ஒரு வழக்கு: விசாரணையில் திடுக் தகவல்கள் அம்பலம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் இன்ஸ்பெக்டர் மீது சிபிசிஐடியில் மேலும் ஒரு வழக்கு இருப்பது தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் ராமர். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ராமசாமி என்பவருக்கும் கோயிலில் சிங்கம் சிலை வைப்பது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது. அதில் ராமசாமி, அவரது மகன்கள் ராஜேந்திரன், ராம்குமார் மற்றும் பெண் இன்ஸ்பெக்டர் சத்திய ஷீலா ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதில் ராமரை தாக்கியதில், தலையில் பலத்த காயம் அடைந்தவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து ராமசாமி, அவரது மகன் ராஜேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ராம்குமார், சத்திய ஷீலா ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். பின்னர் அவர்கள் பெங்களூரில் பதுங்கியிருப்பது தெரிந்து கைது செய்யப்பட்டனர். அவர்கள் தீவிர விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தநிலையில், சத்திய ஷீலா மீது ஏராளமான புகார்கள் வந்ததால், ராமநாதபுரம் மாவட்ட டிஐஜி துரை விசாரணை நடத்தி, சத்திய ஷீலாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் பெண் இன்ஸ்பெக்டர் குறித்து விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. ராம்குமாருக்கும், சத்திய ஷீலாவுக்கும் இடையே டிக் டாக் மூலம்தான் பழக்கம் ஏற்பட்டது. பெண் இன்ஸ்பெக்டருடன் பழகிக் கொண்டிருந்தபோதே, பெண் டிஎஸ்பி ஒருவருக்கும் ராம்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ராம்குமார், பெண் இன்ஸ்பெக்டர் சத்திய ஷீலாவுடன் வசிப்பது தெரிந்ததும், பெண் டிஎஸ்பி தனது காவலர்களை அனுப்பி இருவரையும் போலீஸ் வண்டியிலேயே தூக்கிவரும்படி உத்தரவிட்டார். இரு நாட்கள் விசாரணைக்குப் பிறகு ராம்குமாரின் செல்போனை மட்டும் பிடுங்கிக் கொண்டு அனுப்பி வைத்தார். அதன்பின்னர் இன்ஸ்பெக்டருடன் ராம்குமார் வசித்து வந்தார். அவர் சரியாக வேலைக்குச் செல்லாமல், ராம்குமாருடன் சேர்ந்து வட்டி தொழில் நடத்தி வந்தார்.

இதனால் அவர் மண்டபம் அகதிகள் முகாமுக்கான காவல்நிலைய இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார். தற்போது அவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். அதேநேரத்தில் சில மாதங்களுக்கு முன்னர் சிவகங்கையில் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றியபோது, 20க்கும் மேற்பட்ட இடங்களில் பேக்கரி நடத்தி வந்த நாச்சியப்பன் என்பவரை அழைத்து வந்து போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்தார். இது பொய் வழக்கு என்று கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த நாச்சியப்பன், தற்கொலை செய்து கொண்டார். அவரது உறவினர்கள் மறியல் போராட்டம் நடத்தியதால், அவர் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. விசாரணையில் அவர் மீது போடப்பட்டது பொய் வழக்கு என்று தெரிந்தது. அந்த வழக்கில் சத்திய ஷீலா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது தற்போது ெதரியவந்துள்ளது.

இதனால் சத்திய ஷீலா மீது மேலும் பல புகார்கள் உள்ளதா என்று தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் மர்மமான முறையில் இறந்துள்ளார். அதன்பின்னர் 2 ஆண் நண்பர்கள் இருந்துள்ளனர். தற்போது ராம்குமாரை திருமணம் செய்யாமல் ஒன்றாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் சத்திய ஷீலா மீது நிர்வாக ரீதியிலான விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

The post கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் இன்ஸ்பெக்டர் மீது சிபிசிஐடியில் மேலும் ஒரு வழக்கு: விசாரணையில் திடுக் தகவல்கள் அம்பலம் appeared first on Dinakaran.

Tags : CBCID ,Srivilliputhur ,Rama ,Indira Nagar ,Ramasamy ,
× RELATED கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம்...