×

மரக்கன்று நட தோண்டிய குழியில் கிடைத்த நடராஜர் ஐம்பொன் சிலை: உடன்குடி அருகே பரபரப்பு

உடன்குடி: உடன்குடி அருகே வீட்டில் மரக்கன்று நட தோண்டிய குழியில் ஐம்பொன்னாலான ஆனந்த நடராஜர் சிலை கிடைத்தது. திருச்செந்தூர் தாசில்தார், சிலையை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள சீர்காட்சியை சேர்ந்தவர் வேல்குமார் என்ற வின்சென்ட்(60). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாராயணன் என்பவரிடம் இருந்து நிலம் வாங்கியுள்ளார். கடந்தாண்டு இந்த இடத்தில் வீடு கட்டி குடியேறினார். நேற்று காலை தனது வீட்டின் பின்புறம் செடி வைப்பதற்காக குழி தோண்டியுள்ளார். அப்போது மண்வெட்டியால் வெட்டும்போது டங்… டங்… என சத்தம் கேட்கவே, அந்த இடத்தை கையால் தோண்டிப் பார்த்துள்ளார். அங்கு மண்ணுக்குள் சேதமடைந்த நிலையில் ஒரு சிலை இருந்தது தெரிய வந்தது.

தகவலறிந்த மெஞ்ஞானபுரம் எஸ்எஸ்ஐக்கள் ராமச்சந்திரன், முருகன் ஆகியோர் விரைந்து வந்து சிலையை கைப்பற்றினர். தொடர்ந்து இதுகுறித்து தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருச்செந்தூர் தாசில்தார் பாலசுந்தரம், மாநாடு தண்டுபத்து விஏஓ வெங்கடேசன் ஆகியோர் விரைந்து வந்து பார்வையிட்டனர். இந்த சிலை சுமார் 15 கிலோ எடை கொண்டதாக இருந்தது. 2.5 அடி உயரத்துடன் பழமை வாய்ந்த ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜர் சிலை என்பதும் தெரிய வந்துள்ளது.

சிலையில் 2 கால், கை, தலைமேல் உள்ள குமிழ் அறுத்து எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிலையின் பீடமும் இல்லை. இந்த சிலையை ஆய்வுக்கு அனுப்பி வைக்க வருவாய்த்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக தாசில்தார் தலைமையிலான குழுவினர், கைப்பற்றப்பட்ட சிலையை எடுத்துச் சென்றனர்.

The post மரக்கன்று நட தோண்டிய குழியில் கிடைத்த நடராஜர் ஐம்பொன் சிலை: உடன்குடி அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Udankudi ,Utankudi ,Ananda Natarajar ,Thiruchendoor Dasildar ,Vincent ,Velkumar ,Udankudi, Tuthukudi district ,Natarajar ,
× RELATED உடன்குடியில் புகையிலை பொருட்கள் பதுக்கியவர் கைது