×

மீண்டும் சர்ச்சை கிளம்பியது; சீன படையெடுப்பு குறித்த பேச்சு மன்னிப்பு கேட்டார் மணிசங்கர்: பாஜ குற்றச்சாட்டுக்கு காங். பதிலடி


புதுடெல்லி: சீனா படையெடுப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் உடனடியாக மன்னிப்பு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் சமீபத்தில் பாகிஸ்தான் குறித்து பேசியது சர்ச்சையானது. ‘பாகிஸ்தானுக்கு இந்தியா மதிப்பளிக்க வேண்டும். ஏனெனில் அது இறையாண்மை கொண்ட நாடு மட்டுமின்றி அணுகுண்டையும் வைத்துள்ளது’ என கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, மக்களவை தேர்தல் பிரசாரத்தில் கடுமையாக எதிரொலித்தது. இந்நிலையில், எழுத்தாளர் கல்லோல் பட்டாச்சார்ஜி எழுதிய ‘நேருவின் முதல் ஆட்தேர்வு’ என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. அதில் பங்கேற்ற மணி சங்கர் அய்யர் சீன படையெடுப்பு குறித்து பேசியது மீண்டும் சர்ச்சையாகி உள்ளது.

அவர், 1962ல் நடந்த இந்தியா, சீனா போரை, ‘சீனா படையெடுத்ததாக குற்றம்சாட்டப்படும் நிகழ்வு’ என பேசினார். இது குறித்து பாஜ தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து பாஜ தேசிய செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறுகையில், ‘‘இது காங்கிரசின் தேச விரோத மனப்பான்மையை காட்டுகிறது. தேர்தலில் அவர்களில் தோல்வியை எதிர்கொள்வதால் தேர்தல் செயல்பாட்டில் எதிரி நாடுகள் தலையிடுவதற்கான சிக்னலை தருகின்றனர். ராகுலின் அனுமதியில்லாமல் இப்படி ஒரு அறிக்கையை மணிசங்கர் அய்யரால் வெளியிட முடியாது. இந்த விஷயத்தில் கார்கே கூட மவுனம் காக்கிறார். சீனாவுக்கு எதிராக இந்தியா என்றும் செயல்படாது என முந்தைய ஆட்சியில் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியுடன் காங்கிரஸ் ஒப்பந்தம் செய்திருக்கிறது’’ என்றார்.

இதையடுத்து, உடனடியாக தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் மணிசங்கர் அய்யர். குற்றம்சாட்டப்பட்ட என்ற வார்த்தையை தவறுதலாக பயன்படுத்தியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக கூறினார். மணிசங்கர் அய்யரின் கருத்திலிருந்து விலகி நிற்பதாக காங்கிரசும் கூறியது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டரில், ‘‘மணிசங்கரின் வயதுக்கு மரியாதை தந்து பிரச்னையை ஊதி பெரிதாக்கக் கூடாது. அவர் மன்னிப்பும் கேட்டுள்ளார். 1962ல் இந்தியா மீதான சீன படையெடுப்பு உண்மையானது. அதே போல, 2020 மே தொடக்கத்தில் லடாக்கில் சீன ஊடுருவலும் நிகழ்ந்துள்ளது. அதில் நமது வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அங்குள்ள எல்லையில் தற்போதைய நிலை சீர்குலைந்துள்ளது’’ என கூறி உள்ளார்.

ஐஎப்எஸ் உயர்சாதி சேவை
நூல் வெளியீட்டு விழாவில் பேசிய மணிசங்கர் அய்யர், ‘‘முன்னாள் பிரதமர் நேருவால் நியமிக்கப்பட்ட கடைசி இந்திய வெளியுறவு சேவை (ஐஎப்எஸ்) அதிகாரி நான்தான். எனது முதல் தலைமுறை ஐஎப்எஸ் காலத்தில் அது உயர்சாதி சேவையாக இருந்தது. 21ம் நூற்றாண்டு வரையிலும் அப்படித்தான் இருந்தது. ஆனால் இப்போது இந்தி பேசுபவர்கள் அதிகம் பேர் ஐஎப்எஸ் ஆகி இருக்கிறார்கள். இந்தியாவின் பன்முகத்தன்மையுடன் ஐஎப்எஸ்சும் ஜனநாயகமாகி வருகிறது. அதோடு, பிற நாட்டு பெண்களை மணந்து கொண்டால் ஐஎப்எஸ் பணியிலிருந்து விலக வேண்டுமென்ற சில மோசமான அம்சங்களும் கடந்து விட்டன’’ என்றா

The post மீண்டும் சர்ச்சை கிளம்பியது; சீன படையெடுப்பு குறித்த பேச்சு மன்னிப்பு கேட்டார் மணிசங்கர்: பாஜ குற்றச்சாட்டுக்கு காங். பதிலடி appeared first on Dinakaran.

Tags : Mani Shankar ,Congress ,BJP ,New Delhi ,Senior ,Mani Shankar Aiyar ,China ,Pakistan ,India ,Dinakaran ,
× RELATED குஜராத் தொழிற்பேட்டைகளில் நிலம்...