×

குஜராத் தொழிற்பேட்டைகளில் நிலம் ஒதுக்கீட்டில் பாஜ அரசு மோசடி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

அகமதாபாத்: குஜராத்தில் உள்ள தொழில் பேட்டைகளில் நிலம் ஒதுக்கீட்டில் பாஜ அரசு மிக பெரிய மோசடி செய்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் சக்திசிங் கோஹில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ குஜராத் தொழில் மேம்பாட்டு கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சைக்கா மற்றும் தாஹேஜ் தொழில்பேட்டைகளில் உள்ள பிளாட்டுகள் பொது ஏலம் மூலம் தான் ஓதுக்கீடு செய்ய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த விதிமுறைகள் திரும்ப பெறும் வகையில் மாநில அரசு மாற்றம் கொண்டு வந்தது. அதன்படி,பொது ஏல முறை இல்லாமல் குறிப்பிட்ட தொகையின் அடிப்படையில் பிளாட்டுகளை ஒதுக்கீடு செய்வதற்கு விதிகளில் அரசு திருத்தத்தை கொண்டு வந்துள்ளது.

இந்த முறையிலான ஒதுக்கீட்டின் மூலம் ₹2000 கோடிக்கு மோசடி செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த முடிவை மாற்றியது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும். இதனால் அரசுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு குறித்து உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை நடத்திட வேண்டும்’’ என்றார். ஆனால் இந்த குற்றச்சாட்டை அரசு மறுத்துள்ளது.குஜராத் அமைச்சர் ருஷிகேஷ் படேல்,‘‘பல்வேறு தொழில் துறை அமைப்புகளின் கோரிக்கையின் அடிப்படையில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. சைக்காவில் ஒரு பிளாட்டு கூட ஒதுக்கப்படவில்லை. பிளாட்டுகள் ஒதுக்கீட்டை கமிட்டி தான் தீர்மானிக்கிறது. வெளிப்படைத்தன்மையுடன் நடக்கும் இந்த ஒதுக்கீட்டில் முறைகேடுகளுக்கு வாய்ப்பு இல்லை என்றார்.

The post குஜராத் தொழிற்பேட்டைகளில் நிலம் ஒதுக்கீட்டில் பாஜ அரசு மோசடி: காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : BJP ,Gujarat ,Congress ,AHMEDABAD ,BJP government ,Gujarat State Congress ,President ,Shaktisingh Kohil ,Gujarat Industrial Development Corporation ,
× RELATED குஜராத் தீவிபத்தில் பலியானவர்கள்...