×

புனே சொகுசு கார் விபத்து விவகாரம் ரத்த பரிசோதனையில் குளறுபடி செய்த டாக்டர்கள் கைது

புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனே கல்யாணி நகரில் கடந்த 19ம் தேதியன்று 17 வயது சிறுவன் மதுபோதையில் சொகுசு காரை ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் மென்பொருள் இன்ஜினியர்கள் 2 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு 15 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கிய சிறார் நீதிமன்றம், பல்வேறு தரப்பினரிடையே எழுந்த அதிருப்தியை அடுத்து ஜாமீனை ரத்து செய்து, சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சிறுவனை அடைக்க உத்தரவிட்டது.

மேலும், சிறுவனிடம் காரை ஓட்ட அனுமதித்த அவரது தந்தையை போலீசார் கைது செய்தனர். கார் விபத்தில் சிறுவனை கைது செய்த போலீசார், சிறுவன் மது போதையில் கார் ஓட்டியதை உறுதி செய்ய சிறுவனின் ரத்த மாதிரியை ஆய்வுக்காக சசூன் மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், ஆய்வு முடிவில் சிறுவன் மது அருந்தவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதேநேரத்தில் பாரில் சிறுவன் மது அருந்திய சிசிடிவி காட்சிகள் போலீசிடம் சிக்கியது.

இது குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது, சிறுவனின் தந்தை சசூன் மருத்துவமனை தடயவியல் துறை டாக்டர் அஜய் தாவாரேவை தொடர்புகொண்டு, தனது மகனின் ரத்த மாதிரிக்கு பதிலாக வேறொரு ரத்த மாதிரியை மாற்றி வைக்குமாறு கேட்டது தெரியவந்தது. அதற்காக பணம் தருவதாகவும் ஆசை காட்டி இருக்கிறார். இதையடுத்து ரத்த பரிசோதனையின்போது டாக்டர்கள் அஜய் தாவாரே, ஸ்ரீஹரி ஹல்னார் மற்றும் மருத்துவமனை ஊழியர் அதுல் கத்காம்ப்ளே ஆகியோர் ரத்த மாதிரியை மாற்றி வைத்து மது குடிக்காத ஒருவரின் ரத்த மாதிரியை சோதனை செய்து அறிக்கை தந்தது தெரியவந்தது.

இதையடுத்து டாக்டர்கள் அஜய் தாவாரே மற்றும் ஸ்ரீஹரி ஹல்னார், ஊழியர் அதுல் கத்காம்ப்ளே ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர், மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 3 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அங்கு வரும் 30ம் தேதிவரை 3 பேரையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதி அளித்தது.

The post புனே சொகுசு கார் விபத்து விவகாரம் ரத்த பரிசோதனையில் குளறுபடி செய்த டாக்டர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Pune ,Kalyani, Pune, Maharashtra ,
× RELATED புனே அருகே முன்விரோதத்தால் ஆவேசமாக...