×

சென்னை விமான நிலையத்துக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்: 1 வாரத்தில் வெடிக்கும் என தகவல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், அது ஒரு வாரத்தில் வெடிக்கும் என்று தனியார் விமான நிறுவனத்துக்கு வந்த மர்ம தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தனியார் விமான நிறுவன அலுவலகம் மற்றும் 2 தனியார் அலுவலகங்களுக்கு நேற்று முன்தினம் இ-மெயில் மூலமாக ஒரு மர்ம மிரட்டல் தகவல் வந்தது. அதில், சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அவை இன்னும் ஒரு வாரத்தில் வெடிக்கும் என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த தனியார் நிறுவனங்கள் அந்த தகவல்களை சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். உடனடியாக விமான நிலைய இயக்குனர் தலைமையில், உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது அந்த இ-மெயில் தகவல்களை ஆய்வு செய்தபோது, அது போலியான ஒரு மிரட்டல் தகவல் என்று தெரிந்தது. ஆனாலும் இதுகுறித்து சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. மேலும் விமான நிலைய பாதுகாப்பு பணியில் இருக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் கூடுதல் பாதுகாப்பு போடும்படி கேட்டுக் கொண்டனர். அதன்படி சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவில் இருந்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமானத்தில் பயணிக்க வரும் பயணிகளில் சந்தேகப்படும் பயணிகளை நிறுத்தி, அவர்களது உடமைகளை மீண்டும் ஒரு முறை பரிசோதிக்கின்றனர்.

அதோடு சென்னை விமான நிலையத்தின் கார் பார்க்கிங் பகுதிகளில் நீண்ட நேரமாக நிறுத்தி வைக்கப்படும் கார்களையும் கண்காணித்து சோதனை செய்கின்றனர். மேலும் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் இடம், விமானங்களில் அனுப்பக் கொண்டுவரும் பார்சல்கள்களை தீவிரமாக கண்காணித்து சோதனை செய்து வருகின்றனர். இதற்கிடையே போலீசார் இந்த இ-மெயில் தகவல்களை ஆய்வு செய்ததோடு, எந்த மெயில் ஐடியில் இருந்து இந்த மிரட்டல் தகவல் அனுப்பப்பட்டுள்ளது என்று ஆராய்ந்தபோது, போலியான 2 மெயில் ஐடிகளை உருவாக்கி மிரட்டல் தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளது தெரிய வந்தது. இந்த மிரட்டல் தகவல்களில், போதை கடத்தல் கும்பலுக்கு ஆதரவாக சில வாசகங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த மிரட்டல் தகவல்களை அனுப்பிய மர்ம ஆசாமிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளிதான் என்று, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர சோதனைக்கு பின்பு அறிவித்துள்ளனர். ஆனாலும் ஒரு வாரத்தில் வெடிக்கும் என்று அந்த மிரட்டல் தகவலில் இருப்பதால், சென்னை விமான நிலையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

The post சென்னை விமான நிலையத்துக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்: 1 வாரத்தில் வெடிக்கும் என தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,CHENNAI ,
× RELATED மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை விமான நிலையம்