தொண்டி, மே 25: தொண்டி அருகே நம்புதாளை மற்றும் சில இடங்களில் கிழக்கு கடற்கரை சாலை ஒரம் உள்ள குளத்தில் தடுப்பு வேலி அமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பட்டுக்கோட்டை – ராமேஸ்வரம் கிழக்கு கடற்கரை சாலையின் அருகில் நம்புதாளையில் உள்ள குளத்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் தண்ணீர் ஓரளவு நிரம்பி விட்டது. ரோடும் குளமும் ஒன்றாக காட்சியளிக்கிறது.
இந்நிலையில் வளைவான இடத்தில் குளம் உள்ளதால், குளத்தில் தடுப்பு வேலிகள் இல்லாமல் உள்ளது. மேலும் இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் குளம் இருப்பது தெரியாமல் உள்ளே செல்ல வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே பல முறை வாகனங்கள் குளத்தின் உள்ளே சென்று விபத்து ஏற்பட்டது குறிப்பிடதக்கது. இதே போல் சோழியக்குடி உள்ளிட்ட பகுதியிலும் ரோட்டின் அருகில் எவ்வித தடுப்பும் இல்லாமல் குளங்கள் உள்ளது.
அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து பாண்டியராஜ் கூறியது, வளைவான பகுதியில் குளம் உள்ளதால் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து உள்ளே சென்று விடுகிறது. கடந்த வருடம் ஒரு டூரிஸ்ட் வேன் மற்றும் டாக்டர் ஒருவரின் கார் உள்ளே சென்று தண்ணீரில் மிதந்து விபத்து ஏற்பட்டது. இந்த குளத்தின் கரைப் பகுதியில் தடுப்பு சுவர் அல்லது வேலி அமைத்தால் விபத்தினை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
The post குளத்தில் தடுப்பு வேலி அமைக்க வேண்டுகோள் appeared first on Dinakaran.