×

விடுதி கண்காணிப்பாளர், உடற்பயிற்சி அலுவலர் பணி வரும் 28ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சார்நிலைப் பணியில் அடங்கிய விடுதி கண்காணிப்பாளர், உடற்பயிற்சி அலுவலர் பதவிக்கான சான்றிழ் சரிபார்ப்பு வரும் 28ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சார்நிலைப் பணியில் அடங்கிய விடுதி கண்காணிப்பாளர், உடற்பயிற்சி அலுவலர் பதவிக்கான காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு விண்ணப்பங்களைக் கோரியிருந்தது.

இப்பதவிக்கான எழுத்துத்தேர்வு கடந்த 21.1.2024 அன்று நடைபெற்று, எழுத்துத்தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் 7.3.2024 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. விடுதி கண்காணிப்பாளர், உடற்பயிற்சி அலுவலர் பதவிக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு வருகிற 28ம் தேதி சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை எண், இடஒதுக்கீட்டு விதி, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிக தெரிவாளர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கான நாள். நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்புக்கடிதத்தினை விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.inலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, அதற்கான விவரம் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மற்றும் மின்னஞ்சல்(இமெயில்) மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கான அழைப்பாணை தனியே தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது. மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பில் பங்கேற்க அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர் எழுத்துத்தேர்வில் அவரவர் பெற்ற மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீட்டு விதிகள், விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப பணி நியமனம் வழங்கப்படும்.

மேலும், மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது. விண்ணப்பதாரர்கள் மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு வரத்தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தர ராஜ் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

The post விடுதி கண்காணிப்பாளர், உடற்பயிற்சி அலுவலர் பணி வரும் 28ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : TNPSC ,CHENNAI ,Tamil Nadu Employment and Training Subsidiary Service ,Tamil Nadu Public Service Commission ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியீடு