- அரசு
- மருத்துவ கல்லூரி மருத்துவமனை
- திருவாரூர்
- திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
- அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
- திருவாரூர் கலெக்டர் அலுவலக வளாகம்
- தின மலர்
திருவாரூர், மே 20: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.20 கோடி மதிப்பில் கூடுதல் அவசர சிகிச்சை கட்டிடம் கட்டுமான பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. திருவாரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தின் பின்புறத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. கடந்த 2006, 11ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தின் போது அப்போதைய முதல்வர் கருணாநிதி மூலம் ரூ.100 கோடி மதிப்பில் இந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்டது. இதன் மூலம் ஆண்டொன்றுக்கு 100 மாணவர்கள் வீதம் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 5 வருட படிப்புக்கு மொத்தம் 500 மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும் விவசாய மாவட்டமான இந்த திருவாரூர் மாவட்டத்தில் இதுபோன்ற மருத்துவ கல்லூரி மருத்துவமனை துவங்கியதன் காரணமாக இந்த பகுதியை சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் இந்த கல்லூரியை தேர்வு செய்து படித்து வருகின்றனர். மேலும் கல்லூரியை ஒட்டியவாறு ஒரே வளாகத்தில் விடுதி மற்றும் மருத்துவமனையும் இயங்கி வருவது இக்கல்லூரிக்கு மட்டுமே உரிய சிறப்புடையதாகும். மேலும் இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு 1,200 முதல் 1,300 வரை வெளி நோயாளிகள் வந்து செல்லும் நிலையில் உள்நோயாளியாக திருவாரூர் மாவட்டம் மட்டுமன்றி நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் என மொத்தம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் போது இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனை எவ்வித பராமரிப்புமின்றி கிடப்பில் போடப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் ரூ.12 கோடி மதிப்பில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவு கட்டிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மூலம் திறந்து வைக்கப்பட்டது. இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் தீவிர சிசிச்சை பிரிவு ஆகிய பிரிவுகளில் தற்போது இட நெருக்கடி இருந்து வருகிறது.
இதை கருத்தில் கொண்டு நோயாளிகளின் நலன் கருதியும் கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.அதன்படி சட்டமன்றத்தில் நிதி நிலை அறிக்கையின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அதன்படி மருத்துவகல்லூரியின் டீன் அலுவலகம் அருகே ரூ.20 கோடி மதிப்பில் 50 படுக்கைகளுடன் கூடிய கீழ்தளம் மற்றும் மேல்தளம் என புதிய கட்டிடம் கட்டுமான பணிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மூலம் அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, தலா 22 ஆயிரத்து 600 சதுர அடி பரப்பளவு வீதம் மொத்தம் 45 ஆயிரத்து 200 சதுர அடி பரப்பளவில் மருத்துவ ஆய்வகம் உட்பட பல்வேறு வசதிகளுடன் இந்த கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க,ஸ்டாலினுக்கும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
The post பெற்றோர் மகிழ்ச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வெயிலுக்கு காய்ந்தது, மழைக்கு துளிர்த்தது appeared first on Dinakaran.