×

புஞ்சையரசந்தாங்கல், சிறுகாவேரிப்பாக்கத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஒன்றியம், புஞ்சையரசந்தாங்கல், சிறுகாவேரிப்பாக்கம் ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேரில் ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் ஒன்றியம், புஞ்சையரசந்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியிலுள்ள வீடுகளுக்கு, தினசரி தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்படும் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டியினை, மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, ஒவ்வொரு முறை நீரேற்றும்போதும் குளோரினேஷன் செய்யப்பட்டு சுகாதாரமான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறதா என்பதையும், பயிற்சி பெற்ற மகளிர் சுய உதவிக்குழுவினர் குடிநீரின் தரம் குறித்து பரிசோதனை செய்வதை பார்வையிட்டு, மாதம் இருமுறை மேல்நிலை நீர்தேக்க தொட்டியை சுத்தம் செய்யுமாறும் அறிவுறுத்தினார். மேலும், பழங்குடியினர் குடியிருப்புகள் 2022-23 திட்டத்தின் கீழ், புஞ்சையரசந்தாங்கல் ஊராட்சியில் 15 பயனாளிகளுக்கு, ரூ.65.61 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பழங்குடியினர் குடியிருப்புகளை பார்வையிட்டு, 10 வீடுகள் கூரை அமைக்கப்பட்ட நிலையிலும், 5 வீடுகள் கூரை முடிவுற்ற நிலையில் உள்ளதை ஆய்வு மேற்கொண்டு, பணிகள் விரைந்து முடித்திட அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகள் 2022-23 திட்டத்தின் கீழ், சிறுகாவேரிப்பாக்கம் முதல் சித்தேரிமேடு வரை 1.40 கிலோ மீட்டர் நீளத்திற்கு, ரூ.73.63 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தார்ச்சாலையை பார்வையிட்டு, சிறுகாவேரிப்பாக்கம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் பயன்பாட்டிற்காக ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறியளவிலான சமுதாய கழிவறையினை பார்வையிட்டு, கழிவறையினை விரையில் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து, சிறுகாவேரிப்பாக்கத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகத்தையும் கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், கிராம ஊராட்சியில் இணையவழி வரி வசூலித்தல், கட்டிட அனுமதி போன்றவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, பொதுமக்களுக்கான சேவைகளை காலதாமதமின்றி வழங்க ஊராட்சி மன்ற தலைவருக்கு, கலெக்டர் அறிவுறுத்தினார். ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post புஞ்சையரசந்தாங்கல், சிறுகாவேரிப்பாக்கத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Punjairasanthangal ,Sirukaveripakkam ,Kanchipuram ,Collector ,Kalachelvi Mohan ,Kanchipuram Union ,Punjairasthankal ,Panchayat ,Punjayarasantangal ,Punjairasantangal ,Dinakaran ,
× RELATED பொது தேர்வுகளில் நல்ல தேர்ச்சி...