×

செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற 3 நாட்களில் 2300 பேர் விண்ணப்பம்: மாநகராட்சி தகவல்

சென்னை,மே 14: செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற கடந்த 3 நாட்களில் 2300 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த வாரம் பூங்காவில் விளையாடிய சிறுமியை 2 வளர்ப்பு நாய்கள் கடித்து குதறிய சம்பவத்தை தொடர்ந்து, மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் முக்கியமாக செல்லபிராணிகளுக்கு உரிமம் பெறுவது கட்டாயம் என்ற அறிவிப்பை தொடர்ந்து, செல்லப்பிராணிக்கு உரிமம் பெற ஏராளமானோர் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். இந்நிலையில் அதிக அளவில் உரிமையாளர்கள் இணைய வழியில் செல்லப்பிராணிகள் உரிமம் பெற்று வருகின்றனர்.

அதன்படி, செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற கடந்த 3 நாட்களில் 2,300 பேர் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனர். இதுவரை 930 பேருக்கு உரிமம் அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது. கடந்த 10 மாதத்தில் இதுவரை 272 பேர் மட்டுமே செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற்ற நிலையில், கடந்த 3 நாட்களில் மட்டும் 2300 பேர் விண்ணப்பித்துள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் நாய், பூனை வளர்க்க உரிமம் கோரி 6 ஆயிரத்து 730 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட விதிமுறைகளை பூர்த்தி செய்யாததாக 3200 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

செல்லப்பிராணிகள் வளர்க்க உரிமம் பெற விரும்புபவர்கள், சென்னை மாநகராட்சியின் www.chennai < http://www.chennai >corporation.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றின் புகைப்படம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து உறுதி மொழியை சமர்ப்பிக்க வேண்டும். இந்த விவரங்களை சம்பந்தப்பட்ட மண்டல கால்நடை உதவி மருத்துவர் சரிபார்த்து அங்கீகரித்த பின்னர் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு பணம் செலுத்துவதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதன் பிறகு, செல்லப்பிராணிகளின் உரிமையளார்கள் இணைய வழியில் ரூ.50 செலுத்த வேண்டும்.

அதன் பிறகு செல்லப்பிராணிகளின் உரிமம் பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு உருவாகும். அதனை கொண்டு செல்லப்பிராணிகளின் உரிமத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆகவே சென்னை மாநகராட்சி பகுதிகளில் உட்பட்ட செல்லப்பிராணிகள் வளர்ப்போர் ஆண்டு தோறும் தங்களது செல்லப்பிராணிகளின் உரிமத்தை இணையவழியில் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தவறும் பட்சத்தில் அந்த உரிமையாளர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, நாய் வளர்க்க பிரியப்படுகிறவர்கள் உரிமை பெற வேண்டும், இல்லாவிட்டால், ரூ.1000 அபராதம் விதிக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் தயாராகி வருகிறார்கள். உரிமம் பெறாவிட்டால் ₹1000 அபராதம் விதிக்க சட்டத்திலும் இடம் உள்ளதையும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற 3 நாட்களில் 2300 பேர் விண்ணப்பம்: மாநகராட்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Municipal Corporation ,Dinakaran ,
× RELATED சென்னை நொச்சிக்குப்பம் மீன் அங்காடி ஜூன் 2வது வாரத்தில் திறப்பு!!