×

மக்களவை தேர்தலில் நான்காம் கட்ட வாக்குப்பதிவிற்கான பிரசாரம் நிறைவு

டெல்லி: மக்களவை தேர்தலில் நான்காம் கட்ட வாக்குப்பதிவிற்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. நாடாளுமன்ற தேர்தலில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அதன்படி, மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 283 இடங்களுக்கு 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. கடைசியாக கடந்த 7ம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. நாளை மறுநாள் (மே.13) நான்காம் கட்டவாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளோடு, தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆகிய மாநில கட்சிகளுக்கும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

நான்காம் கட்ட வாக்குப்பதிவிற்கான பரப்புரையில் பாஜக – காங்கிரஸ் இடையேயான கருத்து மோதல் மேலும் வலுவடைந்தது. அதானி – அம்பானி விவகாரம், தென்மாநில மக்களை காங்கிரஸ் மூத்த தலைவர் நிறவெறியுடன் விமர்சித்ததாக குற்றச்சாட்டு, ராமர் கோயில், ஜிகாத்திற்கு வாக்களிக்காதீர்கள், பாகிஸ்தான் வெடிகுண்டு என பல்வேறு தலைப்புகளில் அரசியல் கட்சி தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நான்காம் கட்ட வாக்குப்பதிவிற்கான தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது. ஆந்திராவில் 25 தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள், ஜம்மு – காஷ்மீரில் 1 தொகுதி, ஜார்கண்டில் நான்கு தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 8 தொகுதிகள், மகாராஷ்ட்ராவில் 11 தொகுதிகள், ஒடிசாவில் நான்கு தொகுதிகள், தெலங்கானாவில் 17 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 13 தொகுதிகள், மேற்குவங்கத்தில் 8 தொகுதிகள் என மொத்தம், 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 96 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மொத்தம் 1,717 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆந்திராவில் உள்ள 25 மக்களவை தொகுதிகளுக்கும், தெலங்கானாவில் உள்ள 17 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதேபோல் ஒடிசாவில் 4 மக்களவைக்கும், 28 சட்டமன்ற தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகனின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா, எதிர்க்கட்சியான காங்கிரஸ் சார்பில் களம் காண்கிறார். ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் பீகாரிலும், மற்றொரு ஒன்றிய அமைச்சரான அர்ஜுன் முண்டா ஜார்கண்டில் போட்டியிடுகின்றனர். அசாதுதீன் ஓவைசி மற்றும் ஒன்றிய அமைச்சரான கிஷன் ரெட்டி ஆகியோர் தெலங்கானாவில் போட்டியிடுகின்றனர். நடிகர் சத்ருகன் சின்ஹா மேற்குவங்கத்தில் திரிணாமுல் சார்பில் களம் காண்கிறார்.

இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வதால், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் போலீசார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடப்பதால், ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

 

The post மக்களவை தேர்தலில் நான்காம் கட்ட வாக்குப்பதிவிற்கான பிரசாரம் நிறைவு appeared first on Dinakaran.

Tags : Lok Sabha elections ,Delhi ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED 6வது கட்ட மக்களவை தேர்தல்; 58...