சாய்பாசா: ‘அம்பானி, அதானிக்காக உழைக்கும் மோடி 10 ஆண்டில் 22 பேரை கோடீஸ்வரராக்கி உள்ளார். ஆனால் எங்களின் இந்தியா கூட்டணி கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதிகளாக ஆக்கும்’ என ஜார்க்கண்ட் பிரசாரத்தில் ராகுல் காந்தி கூறி உள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் சாய்பாசாவில் நேற்று நடந்த தேர்தல் பேரணியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: இந்த தேர்தல் அரசியலமைப்பு சட்டம், பழங்குடியினர், ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரின் உரிமைகளை காப்பதற்கான தேர்தல்.
அரசியலமைப்பை காப்பாற்ற இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் தங்கள் உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறார்கள். பழங்குடியினருக்கு சொந்தமான நிலம், நீர், வனத்தை அபகரித்து சில தொழிலதிபர்களிடம் ஒப்படைக்க மோடி விரும்புகிறார். அதானி, அம்பானிக்காக உழைக்கும் மோடி, கடந்த 10 ஆண்டில் 22 பெரும் கோடீஸ்வரர்களை உருவாக்கி உள்ளார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதி ஆக்குவோம்.
பழங்குடியின மக்கள் எப்போதும் வீட்டு வேலையாட்களாக மட்டுமே இருக்க வேண்டுமென பாஜ விரும்புகிறது. உங்கள் குழந்தைகள் டாக்டர், இன்ஜினியர், வக்கீல் ஆவதை அவர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். இந்த நாடு 90 ஐஏஎஸ் அதிகாரிகளால் நடத்தப்படுகிறது. இதில், நாட்டில் 8 சதவீத மக்கள் தொகை கொண்ட பழங்குடி சமூகத்தில் இருந்து வந்த ஒரே ஒரு ஐஏஎஸ்சும் டெல்லியில் ஓரம்கட்டப்படுகிறார்.
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், வேலையில்லா பட்டதாரிகளுக்கும் டிப்ளமோ படித்தவர்களுக்கும் மாதம் ரூ.8000 சம்பளத்துடன் தொழில் பயிற்சி வழங்குவோம். வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பழங்குடியினர், தலித் மற்றும் ஓபிசி சமூகங்களைச் சேர்ந்த ஏழைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படும். பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.8,500 வீதம் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்குவோம். பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த வேலை முறையை ரத்து செய்வோம். இடஒதுக்கீட்டை 50 சதவீதத்திற்கு மேல் உயர்த்துவோம். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
ஹேமந்த் சோரன் விடுவிக்கப்படுவார்
ராகுல் பேசுகையில், ‘‘ஜார்க்கண்டின் பழங்குடியின முதல்வர் ஹேமந்த் சோரனை பாஜ சிறையில் அடைத்துள்ளது. அவர் விடுவிக்கப்படுவார்’’ என்றார். அப்போது கூட்டத்தில் இருந்த மக்கள், ‘சிறை பூட்டுகள் உடையும், ஹேமந்த் சோரன் விடுவிக்கப்படுவார்’ என ஆரவாரமாக கோஷமிட்டனர்.
The post அம்பானி, அதானிக்காக உழைப்பவர் மோடி: ஜார்க்கண்டில் ராகுல் பிரசாரம்: இந்தியா கூட்டணி பல கோடி மக்களை லட்சாதிபதி ஆக்கும் appeared first on Dinakaran.