×

சேலம் அருகே பரபரப்பு ஓடை பாலத்திற்கு அடியில் 2 ஆண், ஒரு பெண் சடலம்: கொலையா, தற்கொலையா என விசாரணை

ஜலகண்டாபுரம்: சேலம் அருகே ஓடை பாலத்திற்கு அடியில் 2 ஆண், ஒரு பெண் சடலத்தை அழுகிய நிலையில் போலீசார் மீட்டனர். அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா? அல்லது தற்கொலை செய்துகொண்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் இருந்து சின்னப்பம்பட்டிக்கு செல்லும் சாலையில் பணிக்கனூர் என்னும் இடத்தில் ஓடை தரைப்பாலம் உள்ளது. இந்த பாலத்திற்கு அடியில் இருந்து நேற்று காலை கடுமையாக துர்நாற்றம் வீசியது. இதனால் அப்பகுதியை சேர்ந்த சிலர், கீழே இறங்கி சென்று பார்த்தனர். அப்போது, பாலத்திற்குள் 2 ஆண், ஒரு பெண் என 3 பேர் உடல் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தனர். உடனே ஜலகண்டாபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்து கிடந்த 3 பேரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலங்களின் அருகில் ஒரு டிவிஎஸ்-50 மொபட், தலையணை, குளிர்பான பாட்டில், சில்வர் டம்ளர், பிளாஸ்டிக் டம்ளர் ஆகியவை கிடந்தது. இறந்த 3 பேருக்கும் 55 முதல் 65 வயது இருக்கும். அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்ற விவரம் தெரியவில்லை. சின்னப்பம்பட்டி, பணிக்கனூர், ஜலகண்டாபுரம், தாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களில் மாயமானவர்கள் யாரேனும் உள்ளார்களா? என போலீசார் விசாரிக்கின்றனர்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன் இப்பகுதிக்கு வந்து அவர்கள் இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேககின்றனர். அவர்களை மர்மநபர்கள் அழைத்து வந்து கொலை செய்து போட்டுச் சென்றார்களா? அல்லது 3 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த நபர்களாக இருக்கலாம் எனவும் போலீசார் கருதுகின்றனர். சடலத்தின் அருகில் இருந்து மீட்கப்பட்ட மொபட்டின் வண்டி எண்ணை கொண்டு, அது யாருடைய பெயரில் வாங்கப்பட்டுள்ளது என்ற தகவல்களை திரட்டி விசாரிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். 3 பேரின் சடலத்தை அப்பகுதி மக்கள் பார்த்தபோது, அவர்களது தலைமாட்டில் சிவப்பு கயிறுகள், மாந்திரீக எந்திரங்கள் கிடந்துள்ளது. போலீசார் அதனை கைப்பற்றியுள்ளனர். இதனால், இறந்த 3 பேரும் மாந்திரீக தொழில் செய்யும் நபர்களாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அந்த கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சேலம் அருகே பரபரப்பு ஓடை பாலத்திற்கு அடியில் 2 ஆண், ஒரு பெண் சடலம்: கொலையா, தற்கொலையா என விசாரணை appeared first on Dinakaran.

Tags : Salem ,Jalagandapuram ,Salem district ,Dinakaran ,
× RELATED சேலம் அருகே மின்சாரம் தாக்கி தந்தை கண்முன்னே மகன் உயிரிழந்ததால் சோகம்..!!