×

ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கு நயினார் நாகேந்திரனின் நெருங்கிய 2 உறவினரிடம் சிபிசிஐடி விசாரணை

சென்னை: கடந்த மார்ச் 26ம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பறக்கும்படை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தை கொண்டு வந்த நெல்லை பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் மேலாளரும், பாஜ உறுப்பினரான சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. கடந்த 30ம் தேதி சதீஷ், அவரது சகோதரர் நவீன், லாரி டிரைவர் பெருமாளிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இவர்கள் வாக்குமூலத்தின்படி சிபிசிஐடி போலீசார் அனுப்பிய சம்மனை தொடர்ந்து, நயினார் நாகேந்திரன் நெருங்கிய உறவினர் முருகன், ஆசைதம்பி ஆகியோர் எழும்பூர் சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு விசாரணை அதிகாரி டிஎஸ்பி சசிதரன் மற்றும் இன்ஸ்பெக்டர் லோகநாதன் முன்பு ஆஜராகினர். முக்கிய பணி காரணமாக ஜெய்சங்கர் ஆஜராகவில்லை. ஏற்கனவே இந்த வழக்கில் சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோர் அளித்த வாக்குமூலத்தின் படி முருகன், ஆசைதம்பியிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

இரவு வரை நீடித்த விசாரணையில், ரூ.4 கோடி பணம் தொடர்பாக முக்கிய தகவல்கள் முருகன் அளித்த பதிலை வாக்குமூலமாக பதிவு செய்தனர். பணத்தை கொண்டு சென்ற சதீஷ், நவீன், பெருமாள் பயன்படுத்திய செல்போன்களை சிபிசிஐடி அதிகாரிகள் நவீன தொழில் நுட்ப உதவியுடன் யார் யாரிடம் பேசியுள்ளனர் என்ற விவரங்களை சேகரிக்கின்றனர். ஓரிரு நாளில் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்படும் என்று சிபிசிஐடி வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

The post ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கு நயினார் நாகேந்திரனின் நெருங்கிய 2 உறவினரிடம் சிபிசிஐடி விசாரணை appeared first on Dinakaran.

Tags : CBCID ,Nayanar Nagendran ,Chennai ,Nellai Express ,Tambaram railway station ,Nellie BJP ,Dinakaran ,
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு :...