சென்னை: எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த 24 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் ஹால்டிக்கெட்டுகளை தேசிய தேர்வு முகமை தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. இன்று முதல் மாணவ மாணவியர் தங்கள் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் நாடு முழுவதும் உள்ள இடங்களுக்கு வரும் கல்வி ஆண்டில் மாணவர்களை சேர்ப்பதற்கான நுழைவுத் தேர்வு (நீட்) மே 5ம் தேதி நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்து அதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பெற்றது. தற்போது நாடு முழுவதும் 24 லட்சம் பேருக்கும் மேல் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் 557 நகரங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்து 14 நகரங்களில் இருந்தும் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.
நீட் தேர்வு திட்டமிட்டபடி மே 5ம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடக்கும். இந்நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ மாணவியருக்கு தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் ஏப்ரல் 24ம் தேதியே தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால்டிக்கெட்டுகள் http/:exams.nta.ac.in/NEET என்ற இணைய தளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. மாணவ மாணவியர் தங்கள் ஹால்டிக்கெட்டுகளை தங்களின் விண்ணப்ப எண்களை பயன்படுத்தி இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்ய முடியாதவர்கள் 001-40759000 என்ற எண் அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமையின் மூத்த இயக்குநர்( தேர்வுகள்) சாதனா பிரஷார் தெரிவித்துள்ளார்.
The post நீட் ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியீடு appeared first on Dinakaran.