×

டேட்டா சயின்ஸ் படித்த 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு: சென்னை ஐ.ஐ.டி தகவல்


சென்னை: சென்னை ஐ.ஐ.டி, ‘பி.எஸ் தரவு அறிவியல் மற்றும் பயன்பாடுகள்’ எனும் 4 ஆண்டு படிப்பை கடந்த 2020ல் அமல்படுத்தியது. கல்லூரி மாணவர்கள், அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் என நாடு முழுவதும் தற்போது வரை 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பி.எஸ் டேட்டா சயின்ஸ் படிப்பை சென்னை ஐ.ஐ.டியில் பயில்கிறார்கள். இந்நிலையில், பி.எஸ் தரவு அறிவியல் மற்றும் பயன்பாடு படிப்பின் மூலம் பெற்ற பயிற்சியின் அடிப்படையில், 2,500 மாணவ, மாணவிகள் பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளதாக சென்னை ஐ.ஐ.டி தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியில் சேர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. குறிப்பாக, அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகம், ஜார்ஜியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பின்லாந்தின் ஆல்டோ பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் 850 மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதுகுறித்து சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர் காமகோடி கூறுகையில், ‘பி.எஸ் தரவு அறிவியல் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் படைக்கும் சாதனை பெருமை அளிக்கிறது. கடினமாக உழைக்க தயாராக உள்ள, கற்க ஆர்வமுடையவர்களுக்கு சென்னை ஐ.ஐ.டி கதவுகள் திறந்தே இருக்கும்.சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் சென்றடையும் வகையில் பல்வேறு பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளோம் என்றார்.

The post டேட்டா சயின்ஸ் படித்த 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு: சென்னை ஐ.ஐ.டி தகவல் appeared first on Dinakaran.

Tags : IIT Chennai ,Chennai ,
× RELATED பர்மிங்காம் பல்கலைக் கழகத்துடன்...