சிவகாசி, ஏப். 25: சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் முதல்நிலை ஊராட்சியில் செங்கமலநாச்சியார்புரம், கங்காகுளம், என்சிஓ காலனி, சாரதா நகர் உட்பட 21 குக்கிராமங்கள் உள்ளன இதில் சுமார் 21 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு தினமும் டன் கணக்கில் குப்பைகள் அள்ள வேண்டிய கட்டாயம் உள்ள சூழ்நிலையில் தூய்மை பணியாளர்களும் வாகன வசதியும் இல்லாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் ஊராட்சி பகுதியில் ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டதை தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் சிவகாசி காளீஸ்வரி பட்டாசு ஆலை நிறுவனத்திடம் சமுதாய மேம்பாட்டு நிதியில் இருந்து குப்பை வண்டி கேட்டு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இதனை பரிசீலனை செய்த காளீஸ்வரி நிறுவன நிர்வாக இயக்குநர் ஏ.பி.செல்வராஜன் ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனம் வழங்கினார்.
இதனை ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன், துணைத்தலைவர் மாறன்ஜி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். மேலும் ஒரு குப்பை அள்ளும் பேட்டரி வாகனம் காளீஸ்வரி நிறுவனம் விரைவில் தர இருப்பதாக ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன் தெரிவித்தார்.
The post செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சிக்கு குப்பைகள் சேகரிக்கும் பேட்டரி வாகனம் வழங்கல் appeared first on Dinakaran.