சென்னை: இஸ்லாமியர் பற்றி பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சு குறித்த வீடியோவை பகிர்ந்து, ‘தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்’ என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் நடந்த மக்களவை தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, “நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் கூறினார்கள். இஸ்லாமியர்கள் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்கிறார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் பறிபோகிறது. அதிக குழந்தை பெற்றவர்களுக்கும் ஊடுருவல்காரர்களுக்கும் செல்வத்தைப் பகிர்ந்து அளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு தரப் போகிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு அந்த செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கூறுகிறது.
இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தை கூட விட்டு வைக்காது” என்று பேசியிருந்தார். தமிழ்நாடு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பிரதமர் மோடி பேசியதை பகிர்ந்து, “தேர்தல் ஆணையத்துக்கு இரங்கல்’’ என்று பதிவிட்டுள்ளார். அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பாஜவின் தேர்தல் அத்துமீறல்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதை உணர்த்தும் விதமாக தேர்தல் ஆணையத்துக்கு இரங்கல் என்று பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமைச்ரின் இப்பதிவு பேசுபொருளாகி உள்ளது.
The post இஸ்லாமியர் பற்றி மோடி சர்ச்சை பேச்சு எதிரொலி; தேர்தல் ஆணையத்துக்கு இரங்கல்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி appeared first on Dinakaran.