×

கிராம தலைவரை ஓட ஓட துரத்தி பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வாலிபர்: நிலத்தகராறில் ஆத்திரம்; வீடியோ வைரல்

காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம் அருகே நிலத்தகராறில், கிராம தலைவர் மீது வாலிபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள சந்தாபுரம் அடுத்த பூமலை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னவன்(55), கிராம தலைவர். இவர் மாட்டு தீவனக்கடை வைத்து நடத்தி வருகிறார். அதே பகுதியை, சேர்ந்தவர் செந்தில்(26). ஓசூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணி புரிந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே, நிலம் சம்பந்தமாக தகராறு இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக கடந்த 19ம் தேதி, இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தால் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் செந்தில், சின்னவனின் தீவனக்கடைக்கு சென்று அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்றார். இதனை, சுதாரித்து கொண்ட சின்னவன், கடையிலிருந்து வெளியே ஓடிச் சென்று தப்ப முயன்றார். ஆனால், விடாமல் அவரை ஓட ஓட துரத்திச் சென்ற செந்தில், சின்னவன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதில் படுகாயம் அடைந்த சின்னவனை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து தகவலறிந்த காவேரிப்பட்டணம் போலீசார், வழக்குப்பதிந்து செந்திலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

The post கிராம தலைவரை ஓட ஓட துரத்தி பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வாலிபர்: நிலத்தகராறில் ஆத்திரம்; வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Kaveripatnam ,Krishnagiri district ,Chandhapuram ,Bhoomalai ,
× RELATED பேரூராட்சி துணை தலைவியிடம் கார் வாங்கி தருவதாக ₹12 லட்சம் மோசடி