×

தேர்தல் பணி போலீசார் தபால் ஓட்டு போட்டனர்

 

கோவை, ஏப்.15: கோவையில் பாராளுமன்ற தேர்தல் பணியில் உள்ள அரசு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. போலீசார் தபால் ஓட்டு இன்றும், நாளையும் போட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கோவை, பொள்ளாச்சி தொகுதிக்கு உட்பட்டவர்கள் கோவை உப்பிலிபாளையம் காவலர் சமுதாயக்கூடத்திலும் மற்ற தொகுதிகளுக்குட்பட்டவர்கள் அதற்கு எதிரேயுள்ள சிஎஸ்ஐ பள்ளியிலும் வாக்களிக்க மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகரில் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார் என 2,198 பேருக்கும், ஊர்க்காவல் படையினர் 350 பேருக்கும், முன்னாள் போலீசார் 52 பேருக்கும் என மொத்தம் 2,600 பேருக்கு தபால் ஓட்டு செலுத்துவது தொடர்பான முதல்கட்ட படிவம் வழங்கப்பட்டது. தேர்தல் பணியில் ஈடுபட உள்ள காவலர்கள் நேரில் வந்து தபால் ஓட்டு செலுத்தி விட்டு செல்கின்றனர்.

இவர்களில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தபால் ஓட்டுப்போட்டார். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது. ஓட்டுப்பதிவு வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஓட்டுப்போட்ட போலீசாருக்கு விரலில் அழியாத மை வைக்கப்பட்டது. அழியாத மையுடன் போலீசார் சிலர் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் ஓட்டு போட்டாச்சு, எங்க ஜனநாயக கடமையை செய்து விட்டோம் என தகவல் வெளியிட்டனர்.

 

The post தேர்தல் பணி போலீசார் தபால் ஓட்டு போட்டனர் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Pollachi ,Coimbatore Uppilipalayam Police Community Hall ,Dinakaran ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...