×

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் ஆணுறை பெட்டி வைக்க தடை விதிக்க வேண்டும் திருநங்கைகள் ஆட்சியர், எஸ்பியிடம் மனு

கள்ளக்குறிச்சி, ஏப்.13: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சந்தைபேட்டை பகுதியை சேர்ந்த பபிதாரோஸ் திருநங்கை தலைமையில் திருநங்கைகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறி இருப்பதாவது; கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் ஒரு சில தொண்டு நிறுவனங்கள் திருவிழாவிற்கு செல்லும் வழியில் கோயிலுக்கு அருகில் ஆணுறை பெட்டி வைப்பது வழக்கம். ஆனால், கோயில் திருவிழாவில் ஆணுறை பெட்டி வைப்பது நமது ஒட்டுமொத்த தமிழகத்தையே அவமானப்படுத்துவதாக இருக்கிறது. இவ்வளவு பிரசித்திபெற்ற கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் உலகம் முழுவதிலும் இருந்து ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அவர்களுடைய முழு நோக்கமே கூத்தாண்டவரை வழிபட்டால் நாமும் நம் குடும்பமும் நல்ல நிலையில் இருப்போம் என்ற மிகப்பெரிய நம்பிக்கையோடு பக்தர்கள் வந்து கூத்தாண்டவரை வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

இவ்வாறு மக்கள் நம்பிக்கையாக இருக்கும் சூழ்நிலையில் ஒவ்வொரு வருடமும் திருவிழா முடிந்த பின்னர் அந்த கிராமத்து மக்கள் மிகவும் வருத்தப்படும் விஷயம் ஆணுறையை குழந்தைகள் எடுத்து விளையாடுவதும், பொதுமக்கள் அதை பார்த்து மிகவும் கூச்சத்துடனும் சங்கடத்துடனும் செல்கிறார்கள். எனவே, இந்த வருடம் பிரசித்திபெற்ற கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் ஆணுறை பெட்டி வைக்க தடை விதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட எஸ்பியிடமும் திருநங்கைகள் புகார் மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் ஆணுறை பெட்டி வைக்க தடை விதிக்க வேண்டும் திருநங்கைகள் ஆட்சியர், எஸ்பியிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Transgender ,Koowagam Koothandavar temple festival ,Kallakurichi ,Babitharos ,Tirukovilur Marketpet ,District Collector ,Koothandavar temple festival ,SP ,
× RELATED கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை...