×

விபத்தில் கார்பெண்டர் பலி இழப்பீடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி

கடலூர், ஏப். 11: கடலூர் வட்டம் ஆணையம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவனேசன் மகன் பாஸ்கர் (44), கார்பெண்டர். கடந்த 20.8.2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடலூர்-சிதம்பரம் சாலையில் கீழ் பூவாணிகுப்பம் பகுதியில் செல்லும்போது அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதை தொடர்ந்து விபத்தில் பலியான பாஸ்கர் குடும்பத்தைச் சேர்ந்த அவரது மனைவி மற்றும் பிள்ளைகள், நஷ்ட ஈடு கோரி கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சிவமணி மற்றும் வழக்கறிஞர்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் ஆஜராகினர். நீதிமன்றத்தில் இறந்த பாஸ்கருக்கு இழப்பீடாக வட்டியுடன் ரூ.12 லட்சத்து 81 ஆயிரத்து 376 நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் நஷ்டஈடு தொகை போதுமானதாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாரர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு அதன்படி ரூ.21 லட்சத்து 10 ஆயிரம் மற்றும் 7.5 சதவீத வட்டியுடன் ரூ. 30 லட்சத்து 93 ஆயிரத்து 826 நீதிமன்றத்தில் வைப்பீடு செய்ய உத்தரவிடப்பட்டது. மேற்படி நஷ்ட ஈடு தொகை செலுத்தாத காரணத்தால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்தை ஜப்தி செய்ய கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேற்படி மனுவின் மீது கடலூர் கூடுதல் மாவட்ட நீதிபதி பிரபாகரன் ஜப்தி உத்தரவு பிறப்பித்தார். அதன்படி போக்குவரத்து கழக பேருந்தை கடலூர் பேருந்து நிலையத்தில் ஜப்தி செய்து நீதிமன்ற ஊழியர்கள் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

The post விபத்தில் கார்பெண்டர் பலி இழப்பீடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி appeared first on Dinakaran.

Tags : Carpenter ,Cuddalore ,Sivanesan Makan Bhaskar ,Cuddalore District, ,Kamiyampet ,Poowanikuppam ,Cuddalore-Chidambaram road ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை