×

மயிலாடுதுறையில் நடமாடும் சிறுத்தையைதேடும் பணி; தருமபுரியில் இருந்து தெர்மல் டிரோன் கேமரா வரவழைப்பு!

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் நடமாடும் சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம், ஆரோக்கியநாதபுரம் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் நேற்று முன்தினம் வெளியாகியது. இதையடுத்து, சிறுத்தையை பிடிக்கும் பணி இன்று 3வது நாளாக நீடித்து வருகிறது. சிறுத்தையை பிடிக்க ராட்சத வலை, கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆரோக்கியநாதபுரத்தில் சுற்றித்திரிந்த சிறுத்தை சித்தர்காடு பகுதிக்கு இடம்பெயர்ந்திருக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சித்தர்காடு அருகே உள்ள தண்டபாணி செட்டித்தெருவில் ஆடு ஒன்று கடித்து குதறப்பட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளது. அந்த ஆடு சிறுத்தையால் வேட்டையாடப்பட்டதா என்று மருத்துவக்குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதையடுத்து, சிறுத்தையை பிடிக்க சித்தர்காடு பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், நேற்று இரவு சிறுத்தை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டபோது சுமார் 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பின் தொடர்ந்து வந்ததால் சிறுத்தையை தேடும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிறுத்தையை தேடும் பணியில் பின் தொடர்ந்து இடையூறு செய்ய வேண்டாம் என பொதுமக்களிடம் வனத்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர். அத்துடன், தேடுதல் பணிக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு கேட்கவும் வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, மயிலாடுதுறையில் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க தருமபுரியில் இருந்து தெர்மல் டிரோன் கேமரா வரவழைக்கப்பட்டுள்ளது. தெர்மல் டிரோன் கேமரா சோதனை நடைபெற்று வருகிறது. இரவு கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், அச்சப்பட தேவையில்லை எனவும் மயிலாடுதுறை ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

 

The post மயிலாடுதுறையில் நடமாடும் சிறுத்தையைதேடும் பணி; தருமபுரியில் இருந்து தெர்மல் டிரோன் கேமரா வரவழைப்பு! appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Darumpuri ,Mayiladudhara ,Mayiladuthura district ,Chemmangkulam ,Aarokyanathapuram ,
× RELATED கோடை காலத்தில் தகுந்த நேரத்தில்...