கூச்பெஹார்: விஷ பாம்பை கூட நம்பி விடலாம், ஆனால் பாஜவை ஒரு போதும் நம்ப முடியாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். மேற்கு வங்கத்தில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் நடக்கும் கூச் பிஹார் மாவட்டத்தில் நேற்று நடந்த பேரணியில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில்,‘‘ஒன்றிய பாதுகாப்பு அமைப்புகள்,பிஎஸ்எப், ஒன்றிய தொழில் பாதுகாப்பு படை(சிஐஎஸ்எப்) ஆகியவை பாஜவின் உத்தரவுக்கு அடிபணிந்து செயல்படுகின்றன. எனவே, தேர்தல் ஆணையம் இவ்விஷயத்தில் தலையிட்டு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும். வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளின் பெயர்களை சேர்க்க பாஜ மீண்டும் கோரியுள்ளது. எதற்காக மீண்டும் பெயரை சேர்க்கின்றனர்.
மேலும் பெயர்களை சேர்த்தால் அதில் பயனடைய அந்த கட்சி விரும்புகிறது. நீங்கள் விஷ பாம்பை கூட நம்பலாம்,அதை வளர்த்து விடலாம். ஆனால் பாஜவை ஒரு போதும் நம்பி விட முடியாது.பாஜ கட்சி நாட்டை அழிக்கிறது. ஒன்றிய அமைப்புகளின் மிரட்டல்களுக்கு திரிணாமுல் கட்சி அடிபணியாது. உள்ளூர் மக்களை பிஎஸ்எப் படையினர் கொடுமைப்படுத்தி வருவதாக தகவல் வந்துள்ளது. இதே போல் பிஎஸ்எப் வீரர்கள் மக்களை துன்புறுத்தினால் உடனே காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும். தேசிய புலனாய்வு அமைப்பு,வருமான வரித்துறை, பிஎஸ்எப், சிஐஎஸ்எப் ஆகியவை பாஜவுக்காக வேலை செய்கின்றன. பாஜ கட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வருகிறது. ‘ஒரு நாடு ஒரே கட்சி’ என்ற கொள்கையை அது பின்பற்றி வருகிறது’’ என்றார்.
The post விஷ பாம்பை கூட நம்பலாம்; பாஜவை நம்ப முடியாது: மம்தா கடும் தாக்கு appeared first on Dinakaran.