×

பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத் தேர்தல் விறுவிறுப்படைந்துள்ள நிலையில் ஒவ்வொரு வேட்பாளர்களும் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். வேட்பாளருடன் கட்சி நிர்வாகிகளும் சென்று வாக்கு கேட்டு வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் 2 வார காலமே உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியிலும் வாக்குச்சாவடி ஏஜெண்டுகளுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாக தேர்தல் கமிஷனுக்கு புகார்கள் சென்று உள்ளன.

இதனால் பணப்பட்டு வாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் சோதனையை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமைச் செயலகத்தில் இன்று தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ள உயர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடைபெற்றது.

ரூ.50,000 மேல் பணம் எடுத்துச் செல்ல வணிகர்கள் அனுமதி கோரிய கடிதம் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நாள் அன்று வாக்குச்சாவடிக்கு வெளியே பந்தல், நாற்காலிகள் போட அறிவுறுத்தியுள்ளார். பதற்றமான அனைத்து வாக்குச்சாவடிகளிளும் துணை ராணுவப் படையினர் பணியில் இருப்பார்கள். கண்காணிப்பு குழுக்கள் 906ஆகவும், பறக்கும் படை 893 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மக்களவைப் பொதுத்தேர்தல்கள். 2024 மற்றும் 233.விளவன்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19.04.2024 அன்று காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும். மேற்காணும் தேர்தல்களின்போது, வாக்குப்பதிவிற்கு முந்தைய / பிந்தைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை வெளியீடுதலுக்கும் பரப்புதலுக்கும் பின்வரும் வரையறைகள் பொருந்தும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது:

* 1951ஆம் ஆண்டு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126Aஆம் பிரிவின் விதித்துறைகளின்படி (1) யாதொரு நபரும் வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவதோ மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவதோ அல்லது வேறு ஏதேனும் முறையில், அது எதுவாயினும், பரப்பவோ கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையத்தினால் இதுசம்பந்தமாக அறிவிக்கப்படலாம்.

* உட்பிரிவு (1) றின் காரணங்களுக்காக, தேர்தல் ஆணையம், ஒரு பொது ஆணைப்படி, பின்வருவனவற்றைக் கருத்தில் கொண்டு தேதி மற்றும் நேரத்தை அறிவிக்கும், அதாவது:-
* ஒரு பொதுத் தேர்தலின்போது, வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வாக்குப்பதிவு முடிந்தபின் அரை மணிநேரம் வரை தொடரலாம்.

* ஓர் இடைத்தேர்தல் அல்லது பல இடைத்தேர்தல்கள் ஒன்றாக நடைபெற்றால், வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல் மற்றும் வாக்குப்பதிவின் முதல் நாளிலிருந்து வாக்குப்பதிவு முடிந்தபின் அரை மணிநேரம் வரை தொடரலாம்.

பல இடைத்தேர்தல்கள் வெவ்வேறு நாட்களில் ஒன்றாக நடைபெற்றால், வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல், கடைசி வாக்குப்பதிவு முடிந்த அரைமணி நேரம் வரை தொடரலாம். இப்பிரிவின் விதிமுறைகளை மீறும், யாதொரு நபரும் இரண்டு வருட சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும்.

* 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126A ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு. மேற்சொன்ன பிரிவின், (2)(b)ஆம் உட்பிரிவின் விதித்துறைகள் தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையம், 19.04.2024 (வெள்ளிக்கிழமை) காலை 7.00 மணியிலிருந்து 01.06.2024 (சனிக்கிழமை) மாலை 6.30 மணி வரை, வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவது மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது அல்லது வேறு ஏதேனும் முறையில் பரப்புவது (அது எதுவாயினும்) ஆகியவை தடை செய்யப்பட வேண்டிய கால அளவாக இதனால் அறிவிக்கிறது என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

* 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126 (1) (b) ஆம் பிரிவின் கீழ், மேற்காணும் பொதுத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் தொடர்பாக வாக்குப்பதிவு முடிவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்துடன் முடிவடைகின்ற 48 மணி நேர கால அளவில் ஏதேனும் கருத்துக் கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உட்பட, எந்தவொரு தேர்தல் விவகாரங்களையும், எந்தவித மின்னணு ஊடகத்தில் காட்சிப்படுத்துவது தடை செய்யப்படும் என்பதை இந்திய தேர்தல் ஆணையம் மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.

 

The post பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: தலைமை தேர்தல் அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Electoral Officer ,Chennai ,Pannawada ,Chief Election Officer ,Dinakaran ,
× RELATED மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை...