×

மது போதையில் கடும் ரகளை இங்கிலாந்து ராணுவ அதிகாரியை கட்டிப்போட்ட பொதுமக்கள்: ராயப்பேட்டையில் பரபரப்பு

சென்னை, ஏப். 2: ராயப்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகத்தின் முன்பு குடிபோதையில் தகராறு செய்த இங்கிலாந்து நாட்டின் ராணுவ அதிகாரி ஒருவரை கைகளை கட்டி ஆட்டோவில் ஏற்றினர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ராயப்பேட்டையில் பிரபல வணிக வளாகம் உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு வந்த வெளிநாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர், மது போதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டார். பொதுமக்கள் அந்த நபரை தட்டிக்கேட்டபோது, கடும் ரகளையில் ஈடுபட்டார். இதனால், அவரை பிடித்து கைகளை கட்டி ஆட்டோ ஒன்றில் ஏற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனர். ஆனால் அந்த நபர், ஆட்டோவில் ஏறாமல் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டார். தகவலறிந்த அண்ணாசாலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்களிடம் இருந்து வெளிநாட்டு வாலிபரை மீட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது, வெளிநாட்டு நபருடன் வந்த சக ெவளிநாட்டினர் ‘நாங்கள் இங்கிலாந்து நாட்டின் ராணுவ அதிகாரிகள், நாங்கள் தற்போது எண்ணூர் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் தங்கி பணியாற்றி வருகிறோம். ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்தை சுற்றி பார்க்க, சக அதிகாரி ஜே.எல்.வில்லிஸ் உடன் 25 பேர் வந்தோம். வந்த இடத்தில் அவர் அதிகளவில் மது அருந்தியால் இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டது’ என்று கூறினர். அதைதொடர்ந்து அண்ணாசாலை போலீசார் சம்பவம் குறித்து உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதன்படி பிரச்னை செய்த இங்கிலாந்து நாட்டின் ராணுவ அதிகாரி வில்லிஸை சக ராணுவ அதிகாரிகளுடன் போலீசார் செல்ல அனுமதித்தனர். மேலும், அவர்கள் பத்திரமாக செல்ல போலீசார் எண்ணூர் செல்லும் மாநகர பேருந்தில் அனுப்பி வத்தனர். வணிக வளாகம் அருகே நடந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

The post மது போதையில் கடும் ரகளை இங்கிலாந்து ராணுவ அதிகாரியை கட்டிப்போட்ட பொதுமக்கள்: ராயப்பேட்டையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Rayapetta ,Chennai ,
× RELATED சசிகலா ஒரு வெற்று பேப்பர்: ஜெயக்குமார் கிண்டல்