×

ஜோதிட ரகசியங்கள்

உங்களுக்கு வேலையா? தொழிலா?

ஒருவரின் ஜென்ம ஜாதகமானது அவர் எப்படி வாழ்வார் என்பதை நுட்பமாகத் தெரிவிக்கும் சாத்திரமாகும். ஜாதக கிரக நிலைகளோடு கோள் சாரத்தையும் (planet transition) பொருத்திப் பார்க்க வேண்டும். காரணம், ஜாதகம் செயல்படுவதற்கு காலச்சூழல் முக்கியம். ஒருவருக்கு வேலையா வணிகமா? அந்த வேலையாலும் இல்லை தொழில் வணிகத்தாலும் அவர் முன்னேற்றம் அடைய முடியுமா? முடியாதா? என்பதை சுட்டிக் காட்டுவது ஜாதக கிரக நிலைகள்.

ஒருவர் வேலை செய்வாரா? இல்லை வேலை வாங்குவாரா? அதாவது முதலாளியா? தொழிலாளியா என்பதை தெரிந்து கொள்வதற்கு ஆறாம் இடம் உதவும். ஆறாம் இடம் என்பது அடிமைத் தொழிலைக் காட்டுவது. அது சுபத் தன்மையோடு நேர்மறை கிரக ஆதிக்கம் பெற்றிருந்தால், அவர் பலரையும் வைத்து வேலை வாங்கக் கூடியவராக இருப்பார். அதாவது முதலாளியாக இருப்பார். அது பலவீனம் அடைந்தால் அவர் யாரோ ஒருவரிடம் வேலை செய்பவராக இருப்பார்.

அவர் யாரிடம் வேலை செய்வார் என்பதை ஆறாம் இடத்தை கட்டுப்படுத்தும் கிரகங்களைக் கொண்டு தீர்மானிக்கலாம். சனி போன்ற கிரகங்கள் அவர் எத்தகைய வேலையைச் செய்வார் என்பதைச் சுட்டிக்காட்டும். அவர் வணிகம் செய்வாரா? தொழில் செய்வாரா என்பதை ஏழாம் இடமும் பத்தாம் இடமும் காட்டும்.

பத்தாம் இடம் என்பது பொதுவான ஜீவனஸ்தானம். அதாவது, அவருடைய உலக வாழ்க்கையின் ஆதார வருமானத்தை காட்டும் இடம் பத்தாமிடம். அது ஆறாம் இடத்தோடு தொடர்பு கொண்டு இருந்தால், அவர் உத்தியோகம் செய்து பணத்தை ஈட்டி அதன் மூலம் குடும்பம் நடத்துவார். அதே சமயத்தில், ஏழாம் இடம், பத்தாம் இடம் இவைகள் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு கொண்டிருந்தால், அவர் நிச்சயம் தொழில் அல்லது வணிகத்தைச் செய்பவராக இருப்பார். பெரும்பாலும் குரு, புதன், சுக்கிரன், சந்திரன் இவைகள் வணிகத்தைக் குறிக்கும் கிரகங்கள். சனி, ராகு போன்ற கிரகங்கள் தொழில் மற்றும் தொழிலகங்களைக் குறிக்கும் கிரகங்கள். இதில், எந்த கிரகத்தோடு எந்த இடங்கள் தொடர்பு கொண்டு இருக்கின்றன என்பதை வைத்து, என்ன மாதிரியான தொழில் என்பதைக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், எதுவாக இருந்தாலும் 11-வது இடம் பலமாக இருக்க வேண்டும். அது லாபஸ்தானம். பணவரவைக்
காட்டுகின்றது.

அதைப் போலவே, தொழில் வணிகம் அல்லது வேலை எதுவாக இருந்தாலும், இரண்டாம் இடத்தோடு அவசியம் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். அந்தத் தொடர்பு சுபத் தொடர்பாக இருக்க வேண்டும். இந்த இடங்கள் சஷ்டாஷ்டகமாக அமைவதோ அல்லது ஒன்றுக் கொன்று ஒன்று பனிரெண்டு என்கின்ற அமைப்பிலோ இருந்தால் அவர் வேலை செய்தாலும் வருமானம் வராது. தொழில் செய்தாலும் பெரிய அளவில் பணம் புரளாது. 6,8 பலப்பட்டு இருந்தால் பெரிய அளவில் கடன் இருக்கும்.

2,11,10,7 போன்ற ஸ்தானங்களோடு லக்னம் சுபத் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். காரணம், வருகின்ற வருமானத்தை அனுபவிப்பது என்பது லக்னம்தான். லக்னம் பலகீனமாகவோ, விரயத்திலோ அமைந்திருந்தால், அவர் வேலை செய்து சம்பாதிப்பார். ஆனால், அவருக்கான எந்த செலவுகளையும் அவர் செய்து கொள்ள மாட்டார். செய்து கொள்வதில் நாட்டம் இருக்காது. அல்லது அவர் விரும்பினாலும் கிடைக்காது.

என்னுடைய நண்பர் ஒருவருக்கு 10-ஆம் இடம், இரண்டாம் இடம், நான்காம் இடம், 11-ஆம் இடம் எல்லாம் பலமாக இருந்தது. இரண்டாம் இடம் பலமாக இருந்ததால், அவரிடம் நிறைய பணம் இருந்தது. நான்காம் இடம் நலமாக இருந்ததால், மாளிகை போன்ற வீடு, ஆடம்பரமான கார்கள் இருந்தன. பத்தாம் இடம் பலமாக இருந்ததால், தொழில் நன்றாக இருந்தது. ஆறாம் இடமும் பத்தாம் இடமும் சுப இணைப்பு பெற்றிருந்ததால், அவரிடம் 150 பேர்களுக்கு மேல் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், இத்தனை இருந்தும் அவருடைய லக்னமும் பனிரெண்டாம் இடமும் பாதிப்படைந்து இருந்தது. அதனால் அவர் தூங்கும் நேரம் மிகவும் குறைவாக இருந்தது. எப்பொழுது பார்த்தாலும் அலைச்சல்தான். பிரச்னைதான். சாப்பிடுவதற்கு நேரம் இல்லை.

அவர் வீட்டில் ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 40, 50 பேர்களாவது சாப்பிடுவார்கள். ஆனால், அவர் ஒரு நாள்கூட வீட்டில் நல்ல சாப்பாடு சாப்பிடுவதில்லை. பெரும்பாலும் பிரயாணத்தில் இருப்பதால், என்ன முயன்றாலும் நேரத்திற்குச் சாப்பிட முடியாது. சாப்பாடு வைத்திருந்தாலும், பல நேரங்களில் ஏதேனும் ஒரு மீட்டிங் அல்லது முக்கியமான நபர்களைச் சந்திக்க வேண்டிய கட்டாயம், அரசாங்க அதிகாரிகளை சந்திக்க வேண்டிய கட்டாயம் என்று சாப்பிடும் நேரத்தில்தான் வரும்.

ஒருவர் சம்பாதிப்பதை அனுபவிக்க வேண்டும் என்று சொன்னால், லக்னம் வலுவாக இருக்க வேண்டும். இன்னொரு விஷயம். நாம் சில ஜாதகங்களில் கவனிக்கலாம். ஒருவருக்கு லக்னம் வலுவாக இருந்து திரிகோண ஸ்தானங்களான ஐந்தாம் இடமும் ஒன்பதாம் இடமும் பலம் பெற்று இருந்தால், அவருக்கு உண்ணும் உணவு, உடை, வண்டி, வாகனம் போன்ற எந்த விஷயத்திலும் குறை இருக்காது. யாரோ ஒரு புண்ணியவான் உதவி செய்வார். இல்லை பூர்வீகச் சொத்து இருக்கும். நண்பர்கள் உதவுவார்கள். இப்படி ஏதாவது ஒரு வகையில் அவர் மிகவும் சந்தோஷமாக இருப்பார்.

சூரியன், செவ்வாய் போன்ற ராஜ கிரகங்கள் பலமாக இருந்தால், அரசாங்கத்தின் பணம் (சம்பளம்) அனுபவிக்கும் வாய்ப்பு இருக்கும். பெரும்பாலும் அரசு வேலையில் இருப்பார். அதோடு இரண்டாம் இடம் வலுப்பெற்று இருந்தால், உயர்ந்த சம்பளமும் சேமிப்பும் வசதியும் உள்ளவராக இருப்பார். ஒரு கும்ப லக்ன ஜாதகருக்கு ஆறுக்குரிய சந்திரன் பத்தில் நீசம் அடைந்துவிட்டார். ஆனால், பத்துக்குரிய செவ்வாய் மகரத்தில் உச்சம் அடைந்து ஆறாம் இடத்தைப் பார்ப்பதாலும், லக்ன கேந்திரத்தில் பஞ்சமாதிபதி புதனும் சப்தமாதிபதி சூரியனும் இருந்ததாலும், அவர் அரசு வேலையில் இருந்தார். பத்தாம் இடம் சந்திரன் நீசம் ஆனாலும்கூட சந்திரனுக்கு இடம் கொடுத்த செவ்வாய் உச்சம் பெற்றதால், நீச பங்கம் ஆகி பத்தாம் இடம் வலுப்பெற்றது என்பதையும் கவனிக்க வேண்டும்.

தொகுப்பு: பராசரன்

The post ஜோதிட ரகசியங்கள் appeared first on Dinakaran.

Tags : Janma Jataka ,
× RELATED உங்கள் குழந்தைகள் நன்கு படிப்பார்களா?