×

விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி ஒடுக்க முயற்சி மோடி அரசால் ஜனநாயகத்துக்கு பெரும் ஆபத்து: பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை ஒடுக்க பாஜ அரசு முயற்சிக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், இந்திய ஜனநாயகத்துக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொல்லத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது, “பாஜ அரசு மத ஒற்றுமையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கு எதிரான போராட்டம் நம் நாட்டுக்கு மிகவும் அவசியமாகும். நம்முடைய நாட்டில் தற்போதைய மோசமான நிலை குறித்து கவலைப்படும் கோடிக்கணக்கான மக்கள் உள்ளனர். சமநீதியும், எந்த மதத்தையும் பின்பற்றும் உரிமையையும் வழங்குவதுதான் மதசார்பின்மையின் சிறப்பம்சம். ஆனால் ஆர்எஸ்எஸ் மற்றும் சங்பரிவார் அமைப்பினர் மதசார்பின்மைக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர். நம் நாட்டின் ஜனநாயகத்துக்கு தற்போது பெரும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது.

விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை ஒடுக்க பாஜ அரசு முயற்சிக்கிறது. தேர்தல் பத்திர விவகாரம் நம் நாடு கண்ட பெரும் ஊழலாகும். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுக கம்யூனிஸ்ட் கட்சிகள் முடிவெடுத்தன. ஹிட்லரின் பாதையைத் தான் ஆர்எஸ்எஸ் பின் தொடர்கிறது. உள்நாட்டு எதிரிகளை அழிப்பதற்கு ஜெர்மனி மேற்கொண்ட நடவடிக்கைகளை உலகமே கண்டித்தபோது ஆர்எஸ்எஸ் மட்டும் தான் அந்த நடவடிக்கைக்கு ஆதரவளித்தது” என்று அவர் பேசினார்.

The post விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி ஒடுக்க முயற்சி மோடி அரசால் ஜனநாயகத்துக்கு பெரும் ஆபத்து: பினராயி விஜயன் appeared first on Dinakaran.

Tags : Modi government ,Pinarayi Vijayan ,Thiruvananthapuram ,Kerala ,Chief Minister ,BJP government ,Pinarayi ,Kollam, Kerala ,
× RELATED கேரளாவை பிரதமர் மோடி...