×

வயநாட்டில் பலிகடா ஆக்கப்படும் பாஜ மாநில தலைவர்: காங்கிரஸ் தலைவர்கள் கிண்டல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் பாஜ மாநில தலைவர் சுரேந்திரன் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர். கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி 2வது முறையாக போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் 4,31,770 வாக்குகள் வித்தியாசத்தில் இடதுசாரி கூட்டணி வேட்பாளரை தோற்கடித்தார். அந்த தேர்தலில் பாஜவுக்கு 3வது இடம் தான் கிடைத்தது. இந்த முறை காங்கிரசிடம் இருந்து எப்படியாவது தொகுதியை கைப்பற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் இடதுசாரி கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தேசிய தலைவரான ஆனி ராஜா நிறுத்தப்பட்டுள்ளார்.

கடந்த தேர்தலில் பாஜ கூட்டணியில் உள்ள பிடிஜேஎஸ் தான் இங்கு போட்டியிட்டது. ஆனால் இந்த முறை கூட்டணி கட்சியிடமிருந்து பாஜ தொகுதியை பறித்துக் கொண்டது. காங்கிரசும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் வயநாடு தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் பாஜ வேட்பாளர் யார்? என்றே தெரியாமல் இருந்ததால் இந்த கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபடாமல் இருந்தனர். இந்தநிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்புதான் இந்தத் தொகுதியில் மாநிலத் தலைவர் சுரேந்திரன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே சுரேந்திரன் காசர்கோட்டிலும், பத்தனம்திட்டாவிலும் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். சட்டமன்றத் தேர்தலிலும் இவருக்கு தோல்வியே மிஞ்சியது. மீண்டும் தனக்கு பத்தனம்திட்டா தொகுதி கிடைக்கும் என்று சுரேந்திரன் கருதியிருந்தார். ஆனால் அவருக்குப் பதிலாக ஏ.கே. அந்தோணியின் மகன் அனில் ஆண்டனிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இது சுரேந்திரனுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் இம்முறை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அவர் வெளிப்படையாகவே கூறினார்.

இந்தநிலையில் தான் தடாலடியாக வயநாடு தொகுதியில் சுரேந்திரனை வேட்பாளராக பாஜ அறிவித்தது. இதை சுரேந்திரன் கூட சற்றும் எதிர்பார்க்கவில்லை. வெற்றி வாய்ப்பு சிறிதும் கூட இல்லாத தொகுதியில் தன்னை வேட்பாளராக நிறுத்தியது அவருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வேறு வழியின்றி போட்டியிட அவர் சம்மதித்தார். கடந்த பல தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியடைந்த சுரேந்திரன், இந்த முறையும் தோல்வியை தழுவினால் அவரை அப்படியே கட்சியிலிருந்து ஒதுக்கி விடலாம் என திட்டமிட்டு பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எதற்காக சுரேந்திரன் வயநாட்டில் போட்டியிடுகிறார் என தெரியவில்லை என்று காங்கிரஸ் தலைவர்களும் கிண்டல் செய்து வருகின்றனர்.

The post வயநாட்டில் பலிகடா ஆக்கப்படும் பாஜ மாநில தலைவர்: காங்கிரஸ் தலைவர்கள் கிண்டல் appeared first on Dinakaran.

Tags : BJP ,Wayanad ,Congress ,Thiruvananthapuram ,president ,Surendran ,Kerala ,Rahul Gandhi ,Left Alliance ,
× RELATED ராகுல்காந்தி மீதுள்ள அச்சம்...