×

பாலக்காடு மக்களின் வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டிய புகைப்பட கண்காட்சி

பாலக்காடு : பாலக்காடு அருகே புதுப்பரியாரம் மதுரம்காயதியில் நடைபெற்ற இரண்டு நாள் புகைப்படக் கண்காட்சியில் பாலக்காட்டின் கிழக்குப் பகுதியில் வாழும் மக்களின் கிராமிய வாழ்க்கையை வெளிச்சம் போட்டுக் காட்டியது. பாலக்காடு மாவட்டம் சித்தூர்தாலுகா கன்னிமாரி பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவர்கடந்த 15 ஆண்டுகளில் தனது கேமராவில் பதிவு செய்த 60-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மாநில எல்லையில் உள்ள மக்களின் வாழ்க்கையை தனித்துவமாக மையப்படுத்தியவை.

கிழக்கே போகும் வெயில் என்ற தலைப்பில் கிழக்கின் வாழ்வை எதிரொலிக்கும் வகையில் இந்த புகைப்பட கண்காட்சி மூலமாக பாலக்காட்டில் கிழக்கத்திய கிராமிய வாழ்க்கையின் கதை சொல்லப்பட்டது. தினேஷ் பதிவு செய்திருந்த ஒவ்வொரு புகைப்படத்திற்கும் ஒரு கதை இருந்தது. இதில் சில புகைப்படங்கள் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது எதார்த்தமாக மொபைலில் எடுக்கப்பட்டவைகளும் கண்காட்சியில் இடம்பெற்றன.

பெரும்பாலான புகைப்படங்கள் மீனாட்சிபுரம், கோவிந்தாபுரம், கோபாலபுரம், செம்ணாம்பதி மற்றும் நடுப்புணி பகுதிகளில் இருந்து செல்போனில் எடுக்கப்பட்டவை.நடுப்புணி பகுதிகளில் தமிழ் மற்றும் மலையாளம் கலந்த கலாசாரம் கொண்ட மக்களின் எதார்த்தமானவை ஒவ்வொரு புகைப்படத்திலும் தெளிவாகத் தெரிந்தது.நாய்கள், ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் சில புகைப்படங்களில் முக்கிய கலவையாக இருந்தன.காளைகளும் மாட்டு வண்டிகளும் இன்றும் கிழக்கு பாலக்காடு மக்களின் அங்கமாக இருக்கின்றன என்பதற்கு இந்த புகைப்படங்கள் சாட்சி.

பாலக்காடு பற்றி பேசும்போது, ​​மாவட்டத்தின் கிழக்கு மழைநிழல் பகுதிகளின் வாழும் மக்களின் வாழ்க்கையை சாதாரண மக்கள் கவனித்து இருப்பது அரிதாகவே கருதுகின்றனர். பாலக்காடு கிராமங்களைச் சேர்ந்த மக்களின் பழமையும், முரட்டுத்தனமும் இயற்கைப் பின்னணியில் படம் பிடிக்கப்பட்டுள்ளன.பாலக்காட்டில் வள்ளுவநாடு கலாசாரம் கிழக்குப் பிராந்தியத்தின் தமிழ், மலையாளம் கலந்த கலாசாரத்தை விட ஆதிக்கம் செலுத்துகிறது. அதனால், இப்பகுதியில் உள்ள மக்களின் வாழ்க்கை அதிகம் யாரும் பெரிதாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. தினேஷின் படங்கள் பார்க்க பார்க்க மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. என்று எழுத்தாளர் ராஜேஷ் மேனன் கூறினார்.

பனை மரங்கள், அவற்றின் பழங்கள் மற்றும் அவற்றின் பனை ஓலைகள் அவரின் பல படங்களில் பல கோணங்களில் இடம்பெற்றுள்ளன. சில புகைப்படங்களில் வீடுகளும், கடைகளும், குறிப்பாக பனை ஓலையால் வேயப்பட்ட கள்ளு கடைகளும் கடந்த காலத்தை நினைவுபடுத்தியது. ஆனால், இன்றும் மண் மறையாமல் இருக்கிறது என்பதற்கு தினேஷின் நிழற்படங்கள் ஆதாரம். பாலக்காட்டின் கிழக்கு கிராமங்களைச் சேர்ந்த மக்களின் பழமையும், கிராமிய வாழ்க்கையின் மறையை விளக்கும் புகைப்பட கண்காட்சியாக அமைந்திருந்தது என்பதில் எந்தவொரு மாற்று கருத்தும் இல்லை.

மக்களைப் பற்றிய, அந்த மண்ணை பற்றிய கதை, வைக்கோல், கட்டி வைக்கப்பட்டிருக்கும் வைக்கோல் போர்கள், மூங்கில், பனை ஓலைக் கூடைகள், கருப்பட்டி, மண்பாண்டங்கள், கள் தட்டுதல், நெல் என கிராமத்து வாழ்க்கையோடு கச்சிதமாகப் போகும் விஷயங்கள் தினேஷின் புகைப்படங்களில் இடம் பெற்றுள்ளன.இதுகுறித்து தினேஷ் கூறுகையில்,“எனக்கு சிறுவயதிலிருந்தே புகைப்படம் எடுப்பதில் அதிக ஆர்வம் இருந்தது. பின்னர் ஒளிப்பதிவில் நாட்டம் அதிகமானது. ஆனால் அவை விலை உயர்ந்த பொழுதுப்போக்காக இருந்ததால் என்னால் அதில் பெரிதாக முன்னேற முடியவில்லை என்றார்.

The post பாலக்காடு மக்களின் வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டிய புகைப்பட கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Palakkad ,Madurakamqayit ,Dinesh ,Chiturthaluga Kannimari ,Dinakaran ,
× RELATED குழல்மந்தம் அருகே தேர்தல் விதிகளை மீறி மது விற்பனை செய்த பெண் கைது