×

திருமணமான 2 மாதத்தில் தர்மசங்கடம்; ரயிலில் படுக்கை விரிப்பு தலையணை திருடிய கணவன்: போலீசில் புகாரளித்த மனைவி

போபால்: ரயிலில் படுக்கை விரிப்புகள், தலையணை, துண்டுகளை திருடிய கணவர் மீது அவரது மனைவி போலீசில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த அப்சானா கான் என்பவருக்கும், ஐடி இன்ஜினியரான முகமது அர்ஷத் என்பவருக்கும் இந்த ஆண்டு ஜனவரி 12ம் தேதி திருமணம் நடைபெற்றது. அவர்கள் தற்போது போபால் விமான நிலைய சாலையில் உள்ள தத்தா காலனியில் வசிக்கின்றனர். ரம்ஜான் மாதம் என்பதால் அப்சானா தனது வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தபோது, அவரது அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெட்டியை பார்த்தார்.

உடனே அந்த பெட்டியை திறந்து பார்த்தபோது, அதில் இந்திய ரயில்வேக்கு சொந்தமான 40 படுக்கை விரிப்புகள், தலையணை கவர்கள், 30 வெள்ளை துண்டுகள் இருந்தன. அதிர்ச்சியடைந்த அவர், மேற்கண்ட பொருட்களை தனது கணவர் திருடி வந்துள்ளதாக உணர்ந்தார். இதுகுறித்து தனது கணவரிடம் விளக்கம் கேட்டார். மேலும், திருடப்பட்ட பொருட்களை மீண்டும் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஆனால் அவரது கணவர், அப்சானாவின் கோரிக்கையை ஏற்கவில்லை. மாறாக அவரை கொடூரமாக தாக்கியுள்ளார்.

காயமடைந்த அப்சானா, நடந்த சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். அவர்கள் அப்சானாவின் வீட்டிற்கு வந்து படுக்கை விரிப்புகள், தலையணை கவர்கள், வெள்ளை துண்டுகளை வாங்கிச் சென்றனர். மேலும், இதுகுறித்து தனது கணவர் மீது அப்சானா புகார் அளித்துள்ளதால், அவர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 2 மாதத்தில் தனது கணவர் ரயிலில் படுக்கை விரிப்பு, தலையணை திருடியது அவரது மனைவிக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post திருமணமான 2 மாதத்தில் தர்மசங்கடம்; ரயிலில் படுக்கை விரிப்பு தலையணை திருடிய கணவன்: போலீசில் புகாரளித்த மனைவி appeared first on Dinakaran.

Tags : Bhopal ,Apsana Khan ,Kanpur ,Uttar Pradesh ,Mohammad Arshad ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்...