×

மதுரையில் கொடூரம்; பலாத்காரம் செய்து 11-வயது சிறுமி கொலை: பெரியப்பா, பெரியம்மா கைது

மதுரை: மதுரையில் 11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது பெரியப்பா மற்றும் பெரியம்மாவை போலீசார் கைது செய்தனர். மதுரை கூடல்புதூர் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். இவர் 6 மாத குழந்தையாக இருந்தபோது, அவரது தாயார் இறந்தார். இதனால், அவரது தந்தை வேறு பெண்ணை திருமணம் செய்தார். இதையடுத்து சிறுமி மற்றும் அவரது அண்ணனை, அவரது பெரியம்மா வளர்த்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியின் அண்ணன் கண்மாயில் குளிக்கச்சென்றபோது நீரில் மூழ்கி இறந்தான். சிறுமி மட்டும் பெரியம்மா வீட்டில் வளர்ந்து வந்தார். இந்தநிலையில், கடந்த 21ம் தேதி மாலை குளிப்பதற்காக குளியலறைக்கு சென்ற சிறுமி நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டில் இருந்தவர்கள் கதவை உடைத்து பார்த்தபோது, சிறுமி குளியலறையில் மயங்கி கிடந்தார். உடனே சிறுமியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கும், பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர்.

அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். பின்னர் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், சிறுமியின் கழுத்தில் காயம் இருப்பதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து சந்தேகத்தின்பேரில், சிறுமியின் பெரியம்மா மற்றும் பெரியப்பாவை பிடித்து கூடல்புதூர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியை அவர்கள் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், ‘‘சம்பவத்தன்று சிறுமியை, அவரது பெரியப்பா பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதில், சிறுமி உயிரிழந்துள்ளார். இதற்கு பெரியம்மாவும் உடந்தையாக இருந்துள்ளார். இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் குளியலறையில் சிறுமி தவறி விழுந்ததுபோல் நாடகமாடி உள்ளனர். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்’’ என்றனர்.

The post மதுரையில் கொடூரம்; பலாத்காரம் செய்து 11-வயது சிறுமி கொலை: பெரியப்பா, பெரியம்மா கைது appeared first on Dinakaran.

Tags : Periyappa ,Peryamma ,Madurai ,Madura ,Koodalputur ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை