×

விவசாயிகள், விதை விற்பனையாளர்கள் விதை பரிசோதனை செய்து கொள்ள அழைப்பு

 

ஊட்டி, மார்ச் 25: நீலகிரி மாவட்ட விவசாயிகள் மற்றும் விதை விநியோகஸ்தர்கள் இருப்பு வைத்துள்ள விதைகளை பரிசோதனை செய்து கொள்ள விதைப்பரிசோதனை நிலையம் கேட்டு கொண்டுள்ளது. ஊட்டி விதை பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் நவீன் கூறியிருப்பதாவது, நீலகிரி மாவட்ட விவசாயிகள் மற்றும் விதை விநியோகஸ்தர்கள் தாங்கள் இருப்பு வைத்துள்ள விதைகளை ஊட்டி ரோஜா பூங்கா அருகே தோட்டக்கலை இணை இயக்குநர் வளாகத்தில் அமைந்துள்ள விதைப் பரிசோதனை நிலையத்தில் பணிவிதை மாதிரியை கொடுத்து விதைப்பரிசோதனை செய்து கொள்ளலாம்.

இந்நிலையத்தில் விதையின் தர நிர்ணய காரணிகளான முளைப்புத்திறன், புறத்தூய்மை, ஈரப்பதம் போன்றவை பரிசோதனை செய்யப்படுகின்றன. ஒரு பணிவிதை மாதிரிக்கு ரூ.80 மட்டும் பரிசோதனை கட்டணமாக செலுத்தி பயிர், ரகம், குவியல் எண் ஆகியவை குறித்த விபர சீட்டுகளை கொடுத்து, விதையின் தரத்தை அறிந்து கொள்ளலாம்.

விதை பரிசோதனைக்கு சமர்ப்பிக்க வேண்டிய பிரதான காய்கறிகளுக்கான பணிவிதை மாதிரியின் குறைந்தபட்ச அளவு – கேரட், காலிப்ளவர் மற்றும் முட்டைகோஸ் 10 கிராம், பீட்ரூட், முள்ளங்கி 50 கிராம், பீன்ஸ் 450 கிராம், பட்டாணி 250 கிராம், பாலக்கீரை 25 கிராம், ப்ரொக்கோலி, நூல்கோல் மற்றும் டர்னிப் 10 கிராம் ஆகும். இவ்வாறு பயிருக்கேற்ப குறைந்தபட்ச பணிவிதை மாதிரியை கொடுத்து விதைப்பரிசோதனை செய்து விதையின் தரத்தை அறிந்து விதைப்பதன் மூலம் தரமற்ற விதையினால் ஏற்படும் தேவையற்ற செலவுகளை தவிர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு வேளாண் அலுவலர் நவீன் தெரிவித்துள்ளார்.

The post விவசாயிகள், விதை விற்பனையாளர்கள் விதை பரிசோதனை செய்து கொள்ள அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Ooty ,Nilgiri ,Seed Testing Center ,Naveen ,Agriculture Officer ,Ooty Seed Testing Station ,district ,Dinakaran ,
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்கள்...