×

பிளஸ் 1 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு வலை

ஒடுகத்தூர், மார்ச் 23: ஒடுகத்தூர் அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பிளஸ் 1 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. அரசு பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை இறந்த நிலையில் தாயின் அரவணைப்பில் இருந்து வருகிறார். பிளஸ் 1 பொதுத்தேர்வு நடப்பதால் மாணவி தேர்வு எழுதி வந்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. எனவே, அவரது தாயார் அருகில் உள்ள மராட்டியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், மாணவி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தாய் விசாரித்தபோது, மாணவி அதே கிராமத்தை சேர்ந்த ரகு(20) என்பவரை காதலித்து வருவதாகவும், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி தன்னை பலாத்காரம் செய்ததாகவும் கூறியுள்ளார். இதனால் மாணவி கர்ப்பமாகியுள்ளது தெரியவந்தது.

இதற்கிடையில், டாக்டர்கள் சிறுமி பாதிக்கப்பட்டு இருப்பது குறித்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், குழந்தைகள் பாதுகாப்பு திட்ட பொறுப்பாளர்கள், சமூக நல அலுவலர்கள், வருவாய்த்துறையினர் மற்றும் வேப்பங்குப்பம் போலீசார் நேற்று முன்தினம் மாணவி வீட்டிற்கு சென்றனர். பின்னர், மாணவியை மீட்ட வேலூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து, இதுகுறித்து மாணவியின் தாயார் அளித்த புகாரின்பேரில், வேப்பங்குப்பம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து வாலிபர் ரகுவை வலைவீசி தேடி வருகின்றனர்.

The post பிளஸ் 1 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Odugathur ,Odugathur, Vellore district ,
× RELATED குடும்ப பிரச்னையால் பெண்...