×

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர்களிடம் விசாரணை நடத்த அனுமதி.! சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்

சென்னை: குட்கா முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீதான விசாரணைக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டதாகவும் அதுதொடர்பான கோப்புகள் தங்களிடம் பரிசீலனையில் உள்ளதாகவும் சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது. தடையை மீறி குட்கா விற்கப்படுவதாக புகாரின் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றது. இதில், மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து சிபிஐ இவர்களுக்கு எதிராக சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்தநிலையில், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் டிஜிபி, சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர், உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகரிகளுக்கு எதிராக 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த கூடுதல் குற்றப்பத்திரிகை முழுமையாக இல்லை என்பதால் பிழையை சரிசெய்து விசாரணை அனுமதிக்கான ஒப்புதல் ஆவணங்களுடன் தாக்கல் செய்யுமாறு விசாரணை அதிகாரிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வழக்கில் முன்னாள் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் எதிராக விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இந்த நிலையில், இவ் வழக்கு சிபிஐ நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கின் விசாரணை அதிகாரி நேரில் ஆஜராகி இருந்தார். அவரிடம் நீதிபதி, விசாரணையின் தற்போதைய நிலை என்ன என்றும் விசாரணைக்கு அனுமதி கிடைக்காத இருவருக்கு எதிராக ஒப்புதல் கிடைத்து விட்டதா என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த விசாரணை அதிகாரி, ‘’ஒப்புதல் கடிதம் சிபிஐயிடம் பரிசீலனையில் உள்ளது’ என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, பரிசீலனை முடிந்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய எவ்வளவு காலம் ஆகும் என்று நீதிபதி கேட்டதற்கு, ‘’விரைவாக தாக்கல் செய்வதாக விசாரணை அதிகாரி தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை வரும் ஏப்ரல் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர்களிடம் விசாரணை நடத்த அனுமதி.! சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தகவல் appeared first on Dinakaran.

Tags : CBI ,CHENNAI ,Gutka ,Dinakaran ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...