×

நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம் கிண்டி ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு கத்திக்குத்து: கணவன் கைது

ஆலந்தூர்: கிண்டி ரயில் நிலையத்தில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற கணவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் உள்ள கிண்டி ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த ரயில்நிலைய நடைமேடையில் நேற்று நின்றுகொண்டிருந்த பெண்ணிடம், வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஒருவர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாக குத்தினார். இதில், அலறி கூச்சலிட்டபடி அந்த பெண் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

இதையடுத்து, அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அருகில் நின்றிருந்த பயணிகள் இதை பார்த்து அதிர்ச்சியில் கூச்சலிட்டனர். அதன்பேரில், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், அந்த நபரை மடக்கி பிடித்தனர். பிறகு மாம்பலம் ரயில்வே காவல் நிலையத்திற்கு அவரை அனுப்பி வைத்தனர். பின்னர் பலத்த காயத்துடன் கிடந்த அந்த பெண்ணை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில், ரத்த காயத்துடன் கிடந்தவர் பிராட்வே பகுதியை சேர்ந்த பானுமதி (26) என்றும், அவரை கத்தியால் குத்தியவர் அவரது கணவர் வெங்கடேசன் (30) என்பதும் தெரியவந்தது. பானுமதியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, போதையில் தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து அடித்து துன்புறுத்தி வந்த வெங்கடேசன், நேற்று தனது உறவினர் வீட்டுக்கு செல்ல கிண்டி ரயில் நிலையத்திற்கு வந்த பானுமதியை பின் தொடர்ந்து வந்து, ‘‘எங்கு சென்று, யாரை பார்த்து விட்டு வருகிறாய்\” எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதால், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக குத்திவிட்டு தப்ப முயன்றதும் தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கிண்டி ரயில் நிலையத்தில் மனைவியை கணவன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம் கிண்டி ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு கத்திக்குத்து: கணவன் கைது appeared first on Dinakaran.

Tags : Guindy railway station ,Alandur ,Chennai Coast ,Tambaram route ,Dinakaran ,
× RELATED லாரி டயர் வெடித்து ஏட்டு உட்பட இருவர் படுகாயம்