சென்னை: இந்திய ஜனநாயக புலிகள் கட்சி அலுவலகத்தில் இருந்த பொருட்களை திருடியதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணதாசன் மீது, நடிகர் மன்சூர் அலிகான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்திய ஜனநாயக புலிகள் கட்சி என்ற கட்சியில் நடிகர் மன்சூர் அலிகான் தன்னை சமீபத்தில் இணைத்துக்கொண்டு அக்கட்சியின் தலைவராகவும் பதவி வகித்து வந்தார். மேலும், அதிமுகவுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த, கடந்த 13ம் தேதி கட்சியில் இருந்து நான்கு பேரை அழைத்துக்கொண்டு அதிமுக தலைமை அலுவலகத்திற்கும் சென்றிருந்தார்.
இந்த பேச்சுவார்த்தைக்கு பின், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியில் இருந்து மன்சூர் அலிகானை நீக்கம் செய்வதாக அதன் பொதுச்செயலாளர் கண்ணதாசன் கடந்த 15ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இந்திய ஜனநாயக புலிகள் கட்சி அலுவலகத்தில் இருந்த லெட்டர் பேட், ரப்பர் ஸ்டாம்ப், மடிக்கணினி, ரூ.70 ஆயிரம் திருடுபோனதாகவும் இதனை கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த கண்ணதாசன் திருடிவிட்டதாகவும் நடிகர் மன்சூர் அலிகான் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கட்சி அலுவலகத்தில் பொருட்கள் திருட்டு நடிகர் மன்சூர் அலிகான் காவல் நிலையத்தில் புகார் appeared first on Dinakaran.