×

10 ஆண்டுகளுக்கு பிறகு தேனி தொகுதியில் மீண்டும் திமுக போட்டி: வெற்றி வாய்ப்பு பிரகாசம் என்பதால் கட்சியினர் உற்சாகம்

தேனி: தேனி பாராளுமன்ற தொகுதியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக நேரடியாக களம் இறங்க உள்ளது. இதனால், திமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்தியாவில் 18வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கு வரும் ஏப்.19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ளது. இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில், திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அகில இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொமதேக, மநீம உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. அதிமுக சார்பில் மெகா கூட்டணி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி கூறிவந்த நிலையில், இதுவரை அவரது தலைமையை ஏற்று முக்கிய கட்சிகள் யாரும் கூட்டணிக்கு வரவில்லை. இன்னும் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடக்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, ஐ.ஜே.கே, புதிய நீதிக்கட்சி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அணி உள்ளிட்டோர் உள்ளனர். நாம் தமிழர் கட்சி தனியாக போட்டியிடுகின்றது.

பெரியகுளம் தொகுதியாக இருந்தபோது…

தேனி பாராளுமன்ற தொகுதியைப் பொறுத்தவரை கடந்த 1980ம் ஆண்டு மறுசீரமைப்புக்கு முன்பு பெரியகுளம் தொகுதியாக இருந்தது. கடந்த 1980ல் திமுக சார்பில் கம்பம் நடராஜன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் திடீரென இயற்கை எய்தியதால் 1983ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் கம்பம் ராமகிருஷ்ணனும் அதிமுக சார்பில் எஸ்.டி.கே ஜக்கையனும் போட்டியிட்டு, அதிமுக வெற்றி பெற்றது. 1985ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக சார்பில் அக்னிராசுவும், அதிமுக சார்பில் கம்பம் செல்வேந்திரனும் போட்டியிட்டதில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். 1989ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக சார்பில் ஏ.கே.மகேந்திரன் போட்டியிட்டார். இதில், அதிமுக சார்பில் போட்டியிட்ட சேடப்பட்டி முத்தையா வெற்றி பெற்றார். 1991ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக சார்பில் கம்பம் ராமகிருஷ்ணனும், அதிமுக சார்பில் வக்கீல் ராமசாமியும் போட்டியிட்டதில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.

1996ம் ஆண்டு தேர்தலில் திமுக சார்பில் ஞானகுருசாமியும், அதிமுக சார்பில் அப்போதைய சிட்டிங் எம்பியான வக்கீல் ராமசாமியும் போட்டியிட்டனர். இதில், திமுக வேட்பாளர் ஞானகுருசாமி வெற்றி பெற்றார். 1998ம் ஆண்டு பாராளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து, இரண்டு ஆண்டு காலத்தில் ஞானகுருசாமி பதவி இழந்தார். இதனை தொடர்ந்து 1998ம் ஆண்டு திமுக சார்பில் வேட்பாளர் காந்திமதியும், அதிமுக சார்பில் சேடப்பட்டி முத்தையாவும் போட்டியிட்டு, அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். இதைதொடர்ந்து அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1999ம் ஆண்டு கம்பம் செல்வேந்திரன் திமுக சார்பிலும், டிடிவி தினகரன் அதிமுக சார்பிலும் போட்டியிட்டனர். இதில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். 2004ம் ஆண்டு திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஜே.எம்.ஆரூணும், அதிமுக சார்பில் டிடிவி தினகரனும் போட்டியிட்டனர். இதில் திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றார்.

தேனி தொகுதியாக மாறியது:

2009ம் ஆண்டு தேர்தலில் மறுசீரமைப்பில் பெரியகுளம் பாராளுமன்ற தொகுதி, தேனி பாராளுமன்ற தொகுதியாக மாறியது. இதையடுத்து நடந்த முதல் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஜே.எம் ஆரூணும் அதிமுக சார்பில் தங்கதமிழ்செல்வனும் போட்டியிட்டனர். இதில், திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார். 2014ம் ஆண்டு பொன்முத்துராமலிங்கம் திமுக சார்பில் போட்டியிட்டார். அதிமுக சார்பில் பார்த்திபன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் இ.வி.கே எஸ் இளங்கோவன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2 முறை திமுக வெற்றி

பெரியகுளம் மற்றும் மறுசீரமைப்புக்கு பிறகு உருவான தேனி பாராளுமன்ற தொகுதி வரலாற்றில் திமுக இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது. இவர்கள் இரண்டு முறையும் ஐந்தாண்டு காலம் முழுமையாக பதவி வகிக்கவில்லை. தொடர்ந்து நடந்து வந்த பாராளுமன்ற தேர்தல்களில் திமுகவிற்கு பிரதிநிதித்துவம் கிடைக்காத நிலை இருந்து வந்தது. 1996ம் ஆண்டிற்கு பிறகு பழைய பெரியகுளம் மற்றும் புதிய தேனி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் எம்பியாக பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில், தற்போது நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரும் வலிமையுடன் உள்ளதால் தற்போது தேனி தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும் என திமுகவினர் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பு நிலவியது.

இதற்கு ஏற்ப தற்போது திமுக கூட்டணியில் தேனி தொகுதி திமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால் திமுகவினர் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து தேனி பாராளுமன்ற தொகுதி திமுகவுக்கு ஒதுக்கீட்டையடுத்து திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தேனி வடக்கு மற்றும் தேனி தெற்கு மாவட்ட செயலாளர் மதுரை மாவட்ட திமுக செயலாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

The post 10 ஆண்டுகளுக்கு பிறகு தேனி தொகுதியில் மீண்டும் திமுக போட்டி: வெற்றி வாய்ப்பு பிரகாசம் என்பதால் கட்சியினர் உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : Dhimuka ,Teni ,Theni ,Dimuka ,18th People's Election ,India ,Tamil Nadu ,Puducherry ,
× RELATED தேனி கொடுவிலார்ப்பட்டியில் உள்ள...