×

சிஏஏ மூலம் நீர்த்துப்போக செய்கிறார்கள் அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும்: திருமாவளவன் பேச்சு

சென்னை: சிஏஏ சட்டத்தின் மூலம் அரசமைப்பு சட்டத்தை பாஜ நீர்த்துப்போக செய்வதாகவும், அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணி வென்றாக வேண்டும் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் விசிக துணைப் பொதுச் செயலாளர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், எழில் கரோலின், தலைமை நிலைய செயலாளர் பாலசிங்கம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின்போது திருமாவளவன் கூறியதாவது: சிஏஏ சட்டத்தின் மூலம் இஸ்லாமியர் மக்கள் மீது வெறுப்பை தூண்டி விடுகிறார்கள். அரசமைப்பு சட்டத்தை தூக்கி எறிய வேண்டும் என்பதுதான் பாஜவின் நோக்கம்.

அதிமுகவை பலவீனப்படுத்தி பாமக, தேமுதிகவை தனது பக்கம் இருக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். பாஜவால் கை வைக்க முடியாத இயக்கம் திமுக, விசிக, இடதுசாரிகள் கட்சிகள்தான். யார் யாரையோ விலைக்கு வாங்கினார்கள். ஆனால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட்டை விலைக்கு வாங்க முடியவில்லை. அதனால் தான் தேர்தல் பத்திர விவகாரத்தில் பாஜவின் ஊழல் வெளிவந்துள்ளது.

இவ்வளவு மிகப்பெரிய ஊழலை சட்டப்பூர்வமாக செய்துவிட்டு மோடி பதவியில் நீடிப்பதற்க்கு தார்மீகமாக தகுதி உண்டா, இதற்கு பிறகும் மோடி பிரதமர் பதவியில் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் பதவி விலக வேண்டும். போதை இல்லாத இந்தியாவை உருவாக்க முடியும் என்று மோடியால் சொல்ல முடியுமா, போதை இல்லாத இந்தியாவை உருவாக்க குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றால் முதலில் கைது செய்ய வேண்டியது அதானியை தான்.

அதானிக்கு சொந்தமான துறைமுகங்கள் மூலம் தான் போதைப்பொருட்கள் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்கு இந்திய அரசு மோடி அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். பாஜ வென்றால் அரசமைப்புச் சட்டத்தை தூக்கி எறிந்து விடுவார்கள், சிஏஏ சட்டத்தின் மூலம் அரசமைப்பு சட்டத்தை நீர்த்துப்போக செய்கிறார்கள். இந்த நாட்டை காப்பாற்றுவதற்கு இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள். அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணி வென்றாக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post சிஏஏ மூலம் நீர்த்துப்போக செய்கிறார்கள் அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும்: திருமாவளவன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : CAA ,India ,Thirumavalavan ,CHENNAI ,VIT ,President ,BJP ,
× RELATED சிஏஏ சட்டத்திற்கு இபிஎஸ்சுக்கு தெரியாமல் ஓபிஎஸ் ஆதரவு அளித்தார்