×

மகன் திருமண விழாவில் உறவினர்களை மகிழ்விக்க மதுபாட்டில் கடத்திய தாய் உள்பட இருவர் கைது

வில்லியனூர், மார்ச் 14: வில்லியனூர் அடுத்த சேதராப்பட்டு காவல்நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை சேதராப்பட்டு மயிலம் சாலை சந்திப்பில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து மயிலம் நோக்கி பதுங்கி, பதுங்கி வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசாரணை செய்தனர். அப்போது வண்டியில் இருந்த பெரிய சாக்கு மூட்டையை சோதனை செய்தபோது மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அதில் ராணிபேட் மாவட்டம் சோலிங்கபுரம், புள்ளிவலம் பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் கோயில் பூசாரி ராஜூ (20), ராமசாமி மனைவி லட்சுமி (45) என்பது தெரியவந்தது. பிறகு லட்சுமியின் மகனுக்கு அடுத்த வாரம் திருமணம் நடக்கவுள்ளதால், திருமண விழாவிற்கு வரும் உறவினர்களுக்கு கொடுத்து மகிழ்விக்க மதுபாட்டில் கடத்தியதாக இருவரும் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களிடமிருந்து 180 மி.லி 174 பாட்டில், 750 மி.லி 5 பாட்டில், 375 மி.லி 9 பாட்டில் என ரூ.15 ஆயிரம் மதிப்பிலான 188 மதுபாட்டில்கள், ஒரு மோட்டார் சைக்கில் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பிறகு அவர்கள் இருவரையும் கலால்துறையிடம் ஒப்படைத்ததின்பேரில் கலால்துறை போலீசார் அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

The post மகன் திருமண விழாவில் உறவினர்களை மகிழ்விக்க மதுபாட்டில் கடத்திய தாய் உள்பட இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Willianur ,Chetarapattu ,Mylam ,Setarapattu ,Puducherry ,
× RELATED டிராக்டர் மீது லாரி மோதி விபத்து தந்தை கண்முன்னே 3 வயது குழந்தை பலி