×

பேய் ஓட்டுவதாக கூறி நள்ளிரவு வரவழைத்து வெறிச்செயல் மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த போலி சாமியார்

*திருமணம் செய்து ஏமாற்றிய காதலன், 2 பேரும் கைது

திருமலை : பேய் ஓட்டுவதாக கூறி பள்ளி மாணவியை ஆசிரமத்திற்கு வரவழைத்து போலி சாமியார் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தலைமறைவானார். இதையறிந்த அவரது காதலன் உதவி செய்வதாக கூறி மாணவியை அழைத்துச்சென்று பலாத்காரம் செய்து திருமணம் செய்துள்ளார். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் ரயில்வே கோடூரை சேர்ந்தவர் கூலித்தொழிலாளியின் 14 வயது மகள். இவர் மகளின் படிப்புக்காக திருப்பதி எம்.ஆர். பள்ளி பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு குடியேறினார். அங்கிருந்தபடி திருப்பதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இதற்காக அவர் தினமும் ரயிலில் சென்று வந்தார். அப்போது அதே ரயிலில் தினமும் பயணம் செய்யும் 26 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

அப்போது அந்த வாலிபர் தனது பெயர் அபிராம் என்றும், திருப்பதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக இருப்பதாகவும் கூறியுள்ளார். பின்னர் இருவரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டனர். அதன்பின்னர் அடிக்கடி இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர். மேலும் வாட்ஸ் அப்பிலும் `சாட்டிங்க்’ செய்து வந்தனர். சில வாரங்களில் அந்த வாலிபர், மாணவியிடம் காதல் ஆசை கூறியுள்ளார். இதை நம்பி மாணவியும் காதலித்துள்ளார்.

அந்த வாலிபர் அவ்வப்போது அவசர தேவை எனக்கூறி மாணவியிடம் பணம் கேட்டு வந்துள்ளார். மாணவியும் வீட்டில் இருந்த நகை, பணத்தை கொடுத்து உதவி செய்து வந்துள்ளார். இதனிடையே வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகள் மாயமானது குறித்து பெற்றோர் விசாரித்தபோது அந்த மாணவி நடந்ததை கூறியுள்ளார். இதற்கிடையே அந்த வாலிபர் மீதான காதல் குறித்தும் மாணவி தெரிவித்துள்ளார்.

ஆனால் மாணவியின் பெற்றோர், தங்களது மகளுக்கு பேய் பிடித்திருக்கலாம். அதனால்தான் அவர் இவ்வாறு பேசுகிறார் எனக்கருதினர். அக்கம் பக்கத்தினர் கூறியதன்பேரில் கடந்த மாதம் திருப்பதி அடுத்த ரேணிகுண்டாவில் உள்ள ஒரு ஆசிரமத்திற்கு அழைத்துச்சென்றனர். அங்கு சாமியார் மூர்த்தி என்பவர் சிறுமிக்கு மந்திரம் போடுவது போன்று சிறிதுநேரம் நடித்துள்ளார். பின்னர் சிறுமியின் பெற்றோரிடம், `உங்கள் மகளுக்கு பேய் பிடித்துள்ளதால் மனநலம் பாதித்துள்ளார், எனவே இதே ஆசிரமத்தில் 3 நாட்கள் நள்ளிரவு தனியாக பூஜையில் பங்கேற்றால் அனைத்து பிரச்னைகளும் தீரும்’ என்று கூறியுள்ளார். இதை நம்பிய மாணவியின் தந்தை கடந்த மாதம் 20ம் தேதி நள்ளிரவு பூஜைக்காக அழைத்துச்சென்றார்.

அப்போது மாணவியின் தந்தை ஒரு அறையில் காத்திருக்க செய்துவிட்டு சாமியார் மூர்த்தி, மாணவியை தனி அறைக்குள் அழைத்துச்சென்றார். அங்கு மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால், உனது தந்தையை மாந்திரீகம் செய்து கை, கால்களை துண்டித்து விடுவேன் எனவும் அந்த சாமியார் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி வீட்டுக்கு வந்தபிறகும் பெற்றோரிடம் தெரிவிக்காமல் காதலனிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில் மகளுக்கு நேர்ந்த கொடுமை குறித்து அறியாத அவரது தந்தை, 2வது நாளாக நள்ளிரவு பூஜைக்கு அழைத்துச்சென்றார். அப்போது ஆசிரமத்தின் வெளியே மாணவியின் காதலன் மற்றும் அவரது நண்பர்களான ஷமர், ஷரத் ஆகியோர் அங்கு காரில் தயாராக இருந்தனர். இதையறிந்த மாணவி, தந்தைக்கு தெரியாமல் ஆசிரம வாசலில் இருந்து வெளியேறி காதலனுடன் காரில் ஏறி சென்றார். இந்நிலையில் தனது மகள் ஆசிரமத்தில் காணாமல் போனதாக அவரது தந்தை காஜூலமாண்டியம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே மாணவியை அழைத்துச்சென்ற காதலன், நெல்லூரில் உள்ள லாட்ஜில் 3 நாட்களாக தங்க வைத்து பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தெலங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டம் மஞ்சிரியாலாவில் உள்ள ராமர் கோயிலுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டார். பின்னர் மஞ்சிரியாலாவில் இருந்து ஐதராபாத் அழைத்து சென்று அங்கு ஒரு வாரமாக தங்கியிருந்த காதலன் மாணவியை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார்.

இந்நிலையில் காதலனின் நடத்தையில் சந்தேகமடைந்த மாணவி, அவரது பாக்கெட்டில் இருந்த ஆதார் அட்டையை பார்த்தபோது, காதலன் பெயர் அபிராம் இல்லை, ஷபி என தெரியவந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மாணவி உடனடியாக பெற்றோருக்கு கதறி அழுதபடி தெரிவித்தார். தகவலிறந்த காஜூலமாண்டியம் போலீசார் ஐதராபாத் சென்று மாணவியை மீட்டு ரேணிகுண்டாவுக்கு அழைத்து வந்தனர். விசாரணையில் ஆசிரமத்தில் போலி சாமியார் மூர்த்தி பலாத்காரம் செய்தது மற்றும் போலி முகவரியை கூறி காதல் ஆசை வார்த்தைக்கூறி திருமணம் செய்து பலாத்காரம் செய்த ஷபி குறித்தும் தெரியவந்தது.

இதனையடுத்து ரேணிகுண்டா டிஎஸ்பி பவ்யாகிஷோர் மற்றும் போலீசார் மாணவியை மீட்டு மகளிர் ஆணையம் மற்றும் மகளிர் நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். மாணவிக்கு நடத்திய மருத்துவ பரிசோதனையில் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலி சாமியார் மூர்த்தி, ஷபி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஷமர், சரத் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்தனர். ஆனால் அதற்குள் போலி சாமியார் தலைமறைவானார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் ஷபி மற்றும் அவரது நண்பர்களான ஷமர் மற்றும் சரத் ஆகிய 3 பேரை கைது செய்தனர். தப்பிய போலி சாமியாரை தேடி வருகின்றனர்.

போலி சாமியாருக்கு லுக் அவுட் நோட்டீஸ்

இதற்கிடையே மாணவியை பலாத்காரம் செய்த போலி சாமியார் மூர்த்தி, கோதண்ட ராமச்சார்யா என்ற பெயரில் மொரீஷியஸ் நாட்டுக்கு தப்பிச்சென்றதாக தெரிகிறது. இதையடுத்து அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் வழங்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். மேலும் போலி சாமியார் எவ்வளவு நாட்களாக ஆசிரமம் நடத்தி வந்தார், எவ்வளவு பேரை மிரட்டி பலாத்காரம் செய்தார்? என்பது குறித்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

The post பேய் ஓட்டுவதாக கூறி நள்ளிரவு வரவழைத்து வெறிச்செயல் மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த போலி சாமியார் appeared first on Dinakaran.

Tags : Tirumala ,
× RELATED கண்ணமங்கலம் அருகே தம்டகோடி மலையில் தீ