×

டாஸ்மாக் கடையில் துளையிட்டு மதுபானங்களை திருடிய 3 வாலிபர்கள் கைது: மேலும் இருவருக்கு வலை

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே சாலவாக்கம் கிராமத்தில், திருமுக்கூடல் சாலையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையில் தயாளன் என்பவர் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் 29ம் தேதியன்று இரவு 10 மணியளவில் கடை வியாபாரம் முடிந்தபின் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து, அடுத்த நாள் காலை மதுபான விற்பனையாளர்கள் தேவராஜ் மற்றும் பச்சையப்பன் ஆகியோர் 12 மணியளவில் கடையை திறந்து பார்த்தபோது, கடையின் உள்ளே சுவற்றில் துளையிட்டு மதுபானங்கள் திருடிச்சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இது குறித்து சாலவாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், சாலவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், சாலவாக்கம் மதுபான கடை கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகா புதுப்பட்டு கிராமத்தில் பதுங்கி இருப்பதாக சாலவாக்கம் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை போலீசார், புதுப்பட்டு கிராமத்திற்கு விரைந்து அங்கு பதுங்கி இருந்த புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த சுபாஷ் (19), விஷ்வா (எ) விக்னேஷ்வரன் (20) மற்றும் ஜானகிபுரம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (26) ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்கள் கொள்ளையடித்து பதுக்கி வைத்திருந்த மதுபானங்கள் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய லோடு ஆட்டோ உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய மோகன்குமார், மற்றும் கார்த்திக் ஆகிய பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். மேற்படி, கொள்ளை வழக்கில் ஈடுபட்ட நபர்கள் பெருநகர், வந்தவாசி, செங்கல்பட்டு உள்ளிட்ட காவல் நிலையங்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

The post டாஸ்மாக் கடையில் துளையிட்டு மதுபானங்களை திருடிய 3 வாலிபர்கள் கைது: மேலும் இருவருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Uthramerur ,Tirumukoodal road ,Chalavakkam ,Dayalan ,Dinakaran ,
× RELATED 3 நாட்களுக்கு பிறகு திறப்பு டாஸ்மாக் மதுக்கடைகளில் குவிந்த மதுபிரியர்கள்