×

திருவொற்றியூர் திமுக கூட்டத்தில் வாயால் மோடி சுட்டதாக கூறி மக்களுக்கு வடை வினியோகம்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் திமுக கூட்டத்தில் ‘வாயால் மோடி சுட்ட வடை’ என்ற பெயரில் பொதுமக்களுக்கு வடை வினியோகம் செய்யப்பட்டது. சென்னை வடகிழக்கு மாவட்டம், திருவொற்றியூர் கிழக்கு பகுதி 7வது வார்டு திமுக சார்பில் முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ரயில்வே குடியிருப்பு பகுதியில் நடைபெற்றது. கிராமத் தலைவரும், வட்ட துணைச் செயலாளருமான வெங்கட்ராமன் தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் குறிஞ்சி கணேசன் முன்னிலை வகித்தார். கிழக்கு பகுதி செயலாளரும், மண்டலக்குழு தலைவருமான தி.மு.தனியரசு 500 பேருக்கு புடவை, இனிப்பு, பழம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது, தமிழக மக்களுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் எண்ணற்ற திட்டங்களை கொண்டுவந்ததில் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் மோடி தமிழக மக்களுக்காக எந்த நிதியையும் வழங்குவதில்லை. தமிழக மக்கள் கொடுக்கும் ஜிஎஸ்டி வரியை இம்மாநில மக்களுக்கு திருப்பிக் கொடுக்காமல் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு செலவிடுகிறார். கொரோனா, மிக்ஜாம் புயல் போன்ற மிகப்பெரிய பாதிப்புகளை சந்தித்த தமிழக மக்களுக்காக நிதி வழங்காமல் மோடி ஏமாற்றுகிறார். தமிழ்நாட்டு மக்களை மாற்றாந்தாய் பிள்ளையாக பார்க்கும் மோடிக்கு, தமிழக மக்கள் இந்த தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள்.

ஆனால் தமிழகத்திற்கு எல்லாம் செய்வதாகக் கூறி வாயால் அவர் வடை சுடுகிறார் என்று குற்றம்சாட்டி மோடி சுட்ட வடையை பொதுமக்களுக்கு கொடுங்கள் என்று மண்டலக்குழு தலைவர் கூறினார். அப்போது அங்கிருந்த கட்சி தொண்டர்கள் தாங்கள் தயாராக வைத்திருந்த வடையை பொதுமக்களுக்கு விநியோகித்தனர். பின்னர் இல்லம்தோறும் ஸ்டாலினின் குரல் என்ற தமிழக அரசின் திட்டங்களை விளக்கும் துண்டறிக்கையையும் பொதுமக்களுக்கு விநியோகித்தனர். இதில் திமுக நிர்வாகிகள் எம்.வி.குமார், குமரேசன், உசிலை வேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருவொற்றியூர் திமுக கூட்டத்தில் வாயால் மோடி சுட்டதாக கூறி மக்களுக்கு வடை வினியோகம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Tiruvottiyur DMK ,Tiruvottiyur ,DMK ,Chennai Northeast District ,Thiruvotiyur East 7th Ward ,Chief Minister ,Thiruvotiyur DMK ,Thiruvotiyur ,
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...